பிரபல நாட்டுப்புற பாடகி தன்னுடைய காதலரால் கொல்லப்பட்ட சம்பவமானது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த பாடகி! நண்பர்களுடன் சேர்ந்து காதலன் செய்த பகீர்!

இந்திய தலைநகர் டெல்லியில் கிரேட்டர் நொய்டா என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் சுஷ்மா. இவருடைய வயது 25. இவர் ஒரு நாட்டுப்புற பாடகியாவார். 1-ஆம் தேதியன்று இவர் மர்ம நபர்களால் தன்னுடைய வீட்டருகே சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவமானது காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்த தொடங்கினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது சுஷ்மா தன்னுடைய தாயார், சகோதரி மற்றும் காதலரான கஜேந்திரா என்பவருடன் ஒன்றாக வசித்து வந்தார். திருமணம் செய்து கொள்ளாமலேயே கஜேந்திரா உடன் சுஷ்மா வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கஜேந்திராவுக்கும், சுஷ்மாவுக்கும் இடையே சொத்து விவகாரத்தில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் சுஷ்மா கிராமம் கிராமமாக சென்று நாட்டுப்புற பாடல் பாடி வருவதை கஜேந்திரா வன்மையாக கண்டித்துள்ளார்.
இருப்பினும் அவற்றை கண்டுகொள்ளாமல் சுஷ்மா, தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த கஜேந்திரா அவரை கொலை செய்வதற்கு ஆகஸ்ட் மாதத்தில் முயற்சித்தார். கார் விபத்தின் மூலம் அவரை கொலை செய்வதற்கு முயற்சித்தபோது சுஷ்மா அதிர்ஷ்டவசமாக பிழைத்து கொண்டார்.
பின்னர் அஜப் சிங், பிரமோத் மற்றும் அஜித் என்பவருடன் இணைந்து கொண்டு சுஷ்மாவை கொலை செய்வதற்காக கஜேந்திரா திட்டமிட்டுள்ளார். அதன்படி சுஷ்மாவை துப்பாக்கியால் கொலை செய்வதற்காக அவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் பணம் அளித்துள்ளார். சுஷ்மா தன்னுடைய வீட்டு வாசலில் இருந்து காரில் ஏற சென்ற போது அவருடைய வீட்டிலேயே 1-ஆம் தேதி இரவன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
சுஷ்மாவின் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.