சேரன் இப்படி அவமானப்படலாமா? பிக்பாஸில் இருந்து வெளியே அழைக்கும் இயக்குனர் வசந்தபாலன்!

கருணாநிதி பதவியில் இருந்தபோதே, அவரை விமர்சனம் செய்து சினிமா எடுத்த கெத்து டைரக்டர் சேரன்.


அவரது படங்களில் சமூக அக்கறை கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். நடிகராகவும் வெற்றிபெற்ற சேரன், இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவமானப்பட்டு வருகிறார். இதைக் கண்டு சக கலைஞராக ரத்தக்கண்ணீர் வடிக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் நீங்கள் எதற்காக கலந்துகொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதோ, அவரது பதிவு.

அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்! உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும். காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்த செய்தி ஊடேறி உங்களைத் தொடும் என்றே நம்புகிறேன். உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன். வித்யாகர்வத்துடன் நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது. பருந்து பறக்கும் வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் என அற்புதமான இலக்கியப்படைப்புகள்.

திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள். காலத்தின் கரையான் உங்களையும் உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது. இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் பாலுகேந்திராவுடன் ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள். பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது.

நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்றுதான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய.. உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில் கௌரவக்குறைவு ஏற்பட்ட போது உடனே அதை விட்டு வெளியேறினீர்கள். ஆகவே கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

என்ன சேரன் கேட்குதா..?