கத்தை கத்தையாக ரூ.3 கோடி பணம்! மூட்டை மூட்டையாக ரு.23 கோடி தங்கம்! IT அதிகாரிகளை தலை சுற்ற வைத்த பஞ்சாமிர்த கடைகள்!

பஞ்சாமிர்த கடைகளில் கணக்கில் வராத பணம் மற்றும் நகைகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்திருப்பது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள பிரசாத கடைகளில் கணக்கில் வராத நகைகளும், பணமும் இருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

வருமான வரித்துறையினர் மறைமுகமாக நடத்திய விசாரணையில் "சித்தநாதன் மற்றும் கந்தவிலாஸ்" ஆகிய பிரசாத கடைகளில் எந்தவித ரசீதுமின்றி பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக கண்டறிந்தனர். 

3 நாட்களாக இந்த கடைகளுக்கு சொந்தமான வீடுகள், பண்ணைகள், அருகில் உள்ள பிற கடைகள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவ்வாறு சோதனை நடத்தியதில் கிட்டத்தட்ட 23 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும், 3 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கமும் கைப்பற்றினர். மேலும் 90 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததையும் கண்டுபிடித்தனர்.

பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் சேகரித்துள்ளனர். 2 நிறுவனங்களின் தலைவர்களுக்கும் முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாழைப்பழம், கல்கண்டு ஆகியவற்றை கொள்முதல் செய்த நிறுவனங்களிலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவமானது பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.