14 வயது சிறுவன் தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் சுட்டுக் கொன்று போலீசில் சரணடைந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள அலபாமா பகுதியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
அப்பா, அம்மா, தம்பி, தாத்தா, பாட்டி! 5 பேரையும் சுட்டுக் கொன்ற 14 வயது சிறுவன்! உலகையே உலுக்கிய சம்பவம்!
அமெரிக்காவில் உள்ள அலபாமா பகுதியில் வசித்துவந்த 14 வயது சிறுவன் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து குடும்பத்தில் உள்ள 5 பேரையும் சரமாரியாக சுட்டுள்ளான். அதன்பிறகு இச்சம்பவம் குறித்து அருகிலுள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளான்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் குறித்து எவ்வித தகவலையும் போலீசார் இதுவரை வெளியிடவில்லை. மேலும் அவனுக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது?, சொந்த குடும்பத்தையே இப்படி சுட்டுக் கொன்றதற்கான காரணம் என்ன?, இதன் பின்னணி யாரேனும் இருக்கிறார்களா? என்கிற பாணியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது வரை சம்பவம் குறித்த முழு விவரங்கள் போலீசாரால் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.