பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் தற்கொலை விவகாரம் எந்த விவாதமும் எழுப்பப்படாமல் அடங்கிப்போய் விட்டது.
நேற்று எஸ்.ஆர்.எம்., இன்று வேலூர் வி.ஐ.டி! தற்கொலை கூடாரமாகிறதா கல்லூரிகள்!
அதேபோன்று வேலூரில் இயங்கிவரும் வி.ஐ.டி பல்கலைக்கழகத்திலும் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட தகவல் வெளியே வர, மாணவர் உலகம் அதிர்ந்து நிற்கிறது. வி.ஐ.டி-யில் படித்துவந்த காட்பாடியைச் சேர்ந்த ஏழை மாணவி ஒருவர் கடந்த மாதம் 31-ம் தேதி விடுதியில் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த சம்பவம் கல்லூரி காம்பவுன்ட் தாண்டி வெளியே வராத அளவுக்கு இழுத்து மறைக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாபைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 9-ம் தேதி தற்கொலை செய்திருக்கிறார். இந்த மரண சம்பவமும் பத்திரிகைகளுக்குத் தெரியாமல், கல்லூரி வளாகத்திலேயே முடித்து வைக்கப்பட்டுள்ளது.
ஏன் வேலூர் கல்லூரி மாணவிகள் தற்கொலை விவகாரம் மீடியாக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ‘‘இரண்டு பேருமே மதிப்பெண் குறைவாக வாங்கி தற்கொலை செய்திருக்கிறார்கள், அதற்கு போதிய ஆதாரம் இருக்கிறது. அந்தப் பெண்களின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் வெளியே சொல்லப்படவில்லை’’ என்று தெரிவிக்கிறார்கள்.