ஐரோப்பிய குழுவின் மூலம் காஷ்மீரை என்ன செய்யப்போகிறார் மோடி? கேள்வி எழுப்பும் வன்னி அரசு

ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள் காஷ்மீருக்குள் நுழைய முற்பட்ட நேரத்தில் திருப்பியனுப்பிய மத்திய அரசு, இப்போது ஐரோப்பிய குழுவுக்கு வரவேற்பு கொடுத்துள்ளது. இந்த விஷயம் குறித்து மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகளின் வன்னி அரசு.


காஷ்மீர் பிரச்னையில் பாஜக எடுத்த நிலைப்பாடுதான் சரி என தொடர்ந்து நிறுவ முயல்கிறார் இந்திய தலைமை அமைச்சர் மோடி. அதற்காக என்ன என்ன உத்திகள் இருக்கிறதோ அத்தனையையும் கையாள ஆரம்பித்து விட்டார்.  

உள்நாட்டில் யாரும் பாஜகவை நம்பவில்லை என்பதை புரிந்து கொண்ட மோடி இப்போது வெளிநாட்டிலிருந்து ஆள் பிடித்து நம்பவைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதற்கான வேலைகளை ‘புரோக்கர்’ மாடி சர்மா செய்து வருகிறார்.( இவருடைய ‘டிவிட்டர்’பக்கத்தில் தன்னை சர்வதேச வணிக புரோக்கர் என்றே குறிப்பிட்டுள்ளார்)

அது சரி, இந்த புரோக்கருக்கும் நம் மோடிக்கும் என்ன தொடர்பு?

என்.ஜி.ஓ.வை நடத்தி வரும் இந்த மாடி சர்மா, கடந்த அக்டோபர்7, 2019 அன்று ஐரோப்பிய எம்பிக்களுக்கு கடிதம் ஓன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் "பிரதமர் மோடி உங்களை சந்திக்க விரும்புவதாகவும். இந்திய பயணம் விஐபி தரத்தில் இருக்கும்" என்று சொல்லிவிட்டு 29ம்தேதி காஷ்மீருக்கு சென்று சுற்றிய பிறகு 30ம் தேதி பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த ‘ஏற்பாட்டின்’அடிப்படையில் தான் பிரதமர் மோடியை கடந்த 28.10.2019 அன்று ஐரோப்பிய யூனியனை

சார்ந்த 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை பெற்றனர்.

சர்மா சொன்னது போல ராஜ வரவேற்பு. மோடி சந்திப்புக்கு பின் காஷ்மீர் பயணித்தனர்.

காஷ்மீர் பிரச்சனை இந்தியப்பிரச்சனைதான். இதில் மூன்றாம் நாடுகள்தலையிடக்கூடாது என்று தொடர்ந்து பாஜக சொல்லி வந்தது. இந்த சூழலில் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளை காஷ்மீரத்துக்கு அனுப்புவதன் பின்னணி என்ன?

இவர்கள் யார்? இவர்களின் பின்னணி என்ன?

பிரான்ஸ், போலந்து,இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, செக் குடியரசு, பெல்ஜியம், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளிலிருந்து 27 உறுப்பினர்கள் மோடியை சந்தித்தனர். இவர்கள் அத்தனை பேரும் மோடியின் கொள்கையை ஏற்கும் வலது சாரி சிந்தனையாளர்களாவர். கடந்த செப்டம்பர் 17 அன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைப்பெற்ற விவாதமொன்றில் பங்கேற்று பேசிய போலந்து எம்பியான சார் நெக்கி மற்றும் இத்தாலியின் புல்வியோ இருவரும் காஷ்மீர் பிரச்சனையில் பா.ஜ.க. மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆதரித்து பேசியுள்ளார்கள்.மற்ற உறுப்பினர்கள் இசுலாமிய வெறுப்பையும் அகதிகள் மீதான வெறுப்பையும் அரசியலாக்கி வருபவர்கள். இந்த குழுவில் இங்கிலாந்தின் ‘லிபரல் டெமாக்ரசி கட்சி எம்பிக்களான கிறிஸ் டேவிஸ், ஜரினா ஜான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஆனால் அவர்கள் (காஷ்மீருக்கு சர்வதேச ஊடகவியளாருடன் சுதந்திரமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்று "வெஸ்ட்" அமைப்பின் ஒருங்கினைப்பாளர் மாடி சர்மாவிடம் கோரினர். அதனால் இவர்களின் வருகை மறுக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஐநாவின் மனித உரிமை கவுன்சிலின் சிறப்பு அதிகாரிகளும் தில்லி வெளிநாட்டு தூதுவர்களும் காஷ்மீருக்குள் செல்ல அனுமதி கேட்டபோது நிலமை சரியில்லை என்று தடுக்கப்பட்டார்கள்.

ஊடகங்கள் இன்னும் முயற்சித்து வருகின்றனர். ஆனாலும் காஷ்மீருக்குள் நுழைந்த பாடில்லை.

இத்தகைய சூழலில், சர்வதேச வணிக புரோக்கரான மாடி சர்மாவின் ஒருங்கிணைப்பில்,

காஷ்மீர் பயணத்துக்கான அவசியம் வந்ததை மோடி விளக்குவாரா? இந்த பயணம் இந்திய மக்களை ஏமாற்றவா? உலகை ஏமாற்றவா? என்று கேள்வி எழுப்புகிறார் வன்னி அரசு.