ராமநாதபுரத்தில் டிராஃபிக் போலீஸ், வேன் ஓட்டுநர் இருவரும் ரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் அருகிலுள்ள பொதுமக்களிடையே பரபரப்பையும் கேலியையும் ஏற்படுத்தியுள்ளது.
நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை! இன்ஸ்பெக்டர் கழுத்தில் கடித்த டிரைவர்! 6 தையல் போட்ட பரிதாபம்!
ராமநாதபுரத்தில் உள்ள கேணிக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி விஜயகாந்த், அந்த வழியாக அளவுக்கு அதிகமாக விறகுகளை ஏற்றிச் சென்ற குட்டி யானையை தடுத்து நிறுத்த முயற்சித்தார். அப்போது உடனடியாக நிற்காமல் சிறிது தூரம் தள்ளிச் சென்று வாகனத்தை நிறுத்திய டிரைவர் மீது ஆத்திரம் அடைந்த விஜயகாந்த் விரைந்து சென்று டிரைவரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வேன் டிரைவர் விஜயகாந்தின் சட்டையை பிடித்து தள்ளுமுள்ளில் ஈடுபட்டார். இருவருக்குமிடையே சண்டை தீவிரமாகி அதே இடத்திலேயே ரோட்டில் கட்டி புரண்டு கொண்டனர். அப்போது அந்த வழியாகச் சென்ற பயிற்சி காவலர் இவர்கள் இருவரையும் தடுக்க முயற்சித்தார் அப்போதும் விஜயகாந்தை விடாமல் டிரைவர் பிடித்து இழுத்த போது அவரின் சட்டை கிழிந்தது பொதுமக்களும் இவர்களில் தடுக்க முயற்சித்தனர்
அச்சமயத்தில் விஜயகாந்தை கழுத்திலேயே பலமாக கடித்துள்ளார் வேன் டிரைவர். இதனால் ரத்தம் கொட்டியது. உடனடியாக விஜயகாந்த் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கழுத்தில் ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளன. மேலும் விசாரணையில், டிரைவர் துத்திவலசுப் பகுதியை சேர்ந்த கர்ணன் என்கிற மாரியப்பன் என்று தெரியவந்துள்ளது. இவரை உடனடியாக பஜார் போலீசார் கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டுள்ளனர்.