லிப்ட் கொடுத்து பைக்கில் ஏற்றிச் சென்றவர் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரிப்பு! லிப்ட் கேட்டவர் கொடூர செயல்! அதிர வைக்கும் காரணம்!

இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சிறிது தூரம் சென்ற பிறகு வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த நபர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அவுடபொய்கை எனும் ஊரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் பாதரக்குடி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார். இவர் பதவி வகித்த காலத்தில், மொட்டுபாளையத்தைச் சேர்ந்த குஞ்சு முகமது என்பவரிடம் கண்மாய் குத்தகை தொடர்பாக 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியதாக தெரிகிறது. கடந்த 5 ஆண்டுகள் ஆகியும் தான் வாங்கிய குத்தகை பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். 

முகமது பணத்தை திருப்பிக் கேட்கும் போதெல்லாம் விரைவில் தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகமது முருகானந்தத்தை ஏதாவது செய்ய வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் முருகானந்தம் தனது இருசக்கர வாகனத்தில் அவுடபொய்கை நோக்கி  சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்ற  நபர்  முருகானந்தத்திடம் லிப்ட் கேட்கவே முருகானந்தம் தமது இருசக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளார்.

சிறிது தூரம் கடந்த பின்னர் தன்னை முகமது என அறிமுகப்படுத்திய அவர் பணத்தை எப்போது திருப்பித் தரப்போகிறாய் என முருகானந்தத்திடம் கேட்டுள்ளார். இதற்கு முருகானந்தம் கடனை திருப்பி செலுத்த இயலாது என்பது போல பதில் அளித்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த முகமது  திடீரென தன்னிடம் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை முருகானந்தம் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் இருக்கர வாகனத்தில் இருந்து முகமது கீழே குதித்துவிட்டார். 

இதனையடுத்து தீ உடல் முழுவதும் பரவியது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் இதைப் பார்த்து அங்கு ஓடி வந்து முருகானந்தத்தின் மீது தண்ணீரையும் மணலையும் கொட்டி நெருப்பை அணைத்தனர். பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முருகானந்தம் பலத்த தீக்காயங்களுடனும் உயிருக்கு  ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்பாக  முகமதுவை கைது செய்த போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.