குழந்தை பிறப்புக்குப் பிறகு எடை குறைக்க மூன்றே வழிகள்!

கர்ப்ப காலத்தில் கிட்டத்தட்ட 10 மாத காலம் உடல் எடையை அதிகரிக்கிறார்கள். அந்த எடை பிரசவம் முடிந்தவுடன் சட்டென்று குறைந்துவிடாது என்ற உண்மையை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஆனால், மூன்றே வழிகளை மட்டும் கடைப்பிடித்தால் எளிதில் எடை குறைக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


1.      அளவான உணவு, போதிய தண்ணீர்

பிரசவத்துக்குப் பிறகு  உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். இந்த நேரத்தில் நிறைய பேருக்கு  மன இறுக்கம், எரிச்சல் இருக்கலாம் அதற்காக  முழுமையாக உணவுக் கட்டுப்பாடு இருப்பது அல்லது பட்டினி  இருப்பதோ வேண்டாம். பசிக்கும்போது மட்டும்  சாப்பிட வேண்டும். இது கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், தினசரி உணவில் 300 கலோரி கூடுதலாகச் சேர்த்தால் போதும். நீங்கள் சாப்பிடும் உணவு ஊட்டச் சத்து நிறைந்ததாகவும் கொழுப்பு குறைந்ததாகவும் இருக்கட்டும். அதிக சர்க்கரை, க்ரீம், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

உடலின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க, நாளன்றுக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கவும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டவும் உதவும். மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் போக வேண்டும். இது சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்கும்.

2.     கொஞ்சம் உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். இதற்காக ஜிம்முக்குச் சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதும். யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி கூடாது. அது பாலில் லாக்டிக் அமிலத்தின் அளவை அதிகரித்துப் புளிப்புத் தன்மையைக் கூட்டிவிடும்.

3.     எட்டு மணி நேரத் தூக்கம்

குழந்தை எப்போது தூங்குகிறதோ, அதுதான் தாய்க்கும் தூங்கும் நேரமாக இருக்க வேண்டும். அதனால்  குழந்தை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுங்கள். சரியாகத் தூங்காமல் இருப்பதும் தேவைக்கு அதிக நேரம் தூங்குவதும் உடல் எடையை அதிகரித்துவிடும். தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது. இந்த மூன்று வழிகளையும் கடைபிடித்துவந்தால் நிச்சயம் உடல் எடையை குறைத்துவிடலாம்.