காஞ்சிபுரம் கலெக்ட்ரை சஸ்பென்ட் பண்ணுங்க! மனித உரிமை ஆணையம் தடாலடி, போர்க்கொடி தூக்கும் அறப்போர் இயக்கம்!

காவல் துறை அதிகாரியை கலெக்டர் பொன்னையா எப்படியெல்லாம் திட்டித் தீர்த்தார் என்பதை தமிழகத்தில் உள்ள் அத்தனை பேரும் பார்த்துவிட்டனர். அதனால்தானோ என்னவோ, அவர் மீது மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.


இதுதவிர பொன்னையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கடிதம் அனுப்பியிருக்கிறது. காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அவர்கள் ஒரு காவல் துறை அதிகாரியை காஞ்சி அத்திவரதர் கோவில் முன்பு தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய காட்சி அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டு வருவதை நாம் அனைவரும் பார்த்தோம்.

அந்த அதிகாரி ஏதும் தவறு செய்து இருந்தால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பரிந்துரை செய்யலாம். அதை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய ஒரு ஆட்சியர் இப்படி காவல்துறை அதிகாரியை மிரட்டுவதும் தரக்குறைவாக பேசுவதும் மிகவும் தவறு. உடனடியாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 

கீழ்மட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளை தொடர்ந்து மேல்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் அச்சுறுத்துவதும் மிரட்டுவதும் தொடர் நிகழ்வுகளாகி வருகின்றது, ஏற்கனவே கீழ்மட்ட காவல்துறையில் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் காவலர்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரியது.

அவர்களது மன உளைச்சலுக்கு காரணமாக அமைவது 

1. அவர்களுக்கு 12 முதல் 15 மணி நேரம் வரை வேலை செய்ய வைப்பது 

2. அவர்களின் சொந்தங்களின் கல்யாணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு கூட அவர்களுக்கு விடுப்பு வழங்காதது

3. மேலதிகார்கள் தொடர்ந்து கீழதிகாரிகளை சட்ட விரோத வேலைகள் செய்ய அழுத்தம் கொடுப்பது

4. காவல்துறையின் செயல்பாட்டில் அரசியல்வாதிகளின் தொடர் தலையீடு.

5. காஞ்சி ஆட்சியர் பொன்னையா போன்று உயரதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசுவது மற்றும் மிரட்டுவது.

6. சில மேலதிகாரிகளின் சட்ட விரோத வேலைகளுக்கு அவர்கள் அடிபணியாத போது அவர்களை பணியிடம் மாற்றுவது 

7. மேலதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்துதல்.

காவல்துறை நம் சட்ட ஒழுங்கை காக்கவும் சட்டப்படி மக்களை நடக்க வைக்கவும் மிக அவசியம். அவர்களின் இந்த நிலையை மாற்ற காவல்துறை தன்னிச்சையாக இயங்குவது அவசியம். கடந்த சில மாதங்களாக கீழ்மட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் எங்களை நாடி காவல்துறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டுகின்றனர்.

உச்சநீதி மன்றம் 2007 ல் பரிந்துரை செய்த காவல்துறை சீர்த்திருத்தங்களை நம் தமிழகம் பெரும்பாலும் நிறைவேற்றாமலே உள்ளோம். அரசியல் தலையீட்டை குறைப்பது, வெளிப்படைதன்மையுடன் கூடிய நியமனம், ஓரிடத்தில் குறைந்தபட்சமாக 2 வருட பணி, சட்ட ஒழுங்கையும் விசாரணைகளையும் பிரிப்பது, பணி மாற்றம்,

உயர்வுக்காக தனியாக காவல்துறை நிருவாக வாரியம் அமைத்தல், தன்னிச்சையாக இயங்கும் காவல்துறை புகார் மையம் என பல பரிந்துரைகள் உள்ளது. இவை பெரும்பாலும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.

கோரிக்கைகள்:

1. கீழ்மட்ட காவல்அதிகாரிகளுக்கான நீதியின் பக்கம் அரசு இருக்கிறது என்பதை வெளிக்கொண்டு வரும் வகையில் காஞ்சி ஆட்சியர் பொன்னையாவை உடனடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்

2. உடனடியாக தமிழகத்தில் உச்சநீதி மன்ற பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும்

3. கீழ் மட்ட காவலதிகாரிகளுக்கு அவர்கள் மன உளைச்சலை குறைக்கும் வகையில் ஒரு நல்ல வேலை சூழல் ஏற்படுத்தி கொடுக்கப் பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொன்னையா எல்லோரையும் சரிக்கட்டிவிடுவார் என்பதுதான் பதிலாக சொல்லப்படுகிறது.