நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட, தமிழகச் சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டிட வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி. பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
எடப்பாடியாருக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்.! வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் போடவேண்டும்..

அந்த கடிதத்தில், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம்-2020 (சட்டம் 20 - 2020)” , “விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்- 2020 (சட்டம் 21 - 2020), “அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்- 2020( சட்டம் 22 - 2020) ஆகிய வேளாண் சட்டங்கள் மூன்றையும் நாடாளுமன்றம் இயற்றியிருப்பது, நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் - குறிப்பாகத் தமிழக விவசாயிகள் மத்தியிலும் மிகப்பெரிய அதிருப்தி - எதிர்ப்பு அலைகளை உருவாக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் விவசாயிகள் இச்சட்டங்களை எதிர்த்துப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
வேளாண்மை நாட்டின் முதுகெலும்பு என்றால், விவசாயிகள் நம் மாநிலத்தின் உயிரோட்டமானதும் விலைமதிப்பற்றதுமான அரிய சொத்துகள்! அவர்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றிடும் கடமை உணர்ச்சியுள்ள மாநில அரசு மட்டுமே, அவர்களின் பாதுகாவலனாக இருக்க முடியும். அந்த அடிப்படையில், காலம் காலமாக - இடைத்தரகர்களிடமிருந்து காப்பாற்றி - விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை மாநில அரசுதான் உறுதி செய்து வருகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் (State List) இருக்கும் பொருள் 14-ல் (Entry) இருக்கும் “வேளாண்மை” (Agriculture) தொடர்பான சட்டங்களை நிறைவேற்றும் முழு அதிகாரமும் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. அதே போல் “நிலம் - நிலம் சார்ந்த சுவாதீன உடன்படிக்கை” (Land and Land Tenure) ஆகியவை மாநிலப் பட்டியல் 18-ல் இருக்கிறது. இவை தவிர, மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் 46, 47, 48 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகவும், ஒன்றோடு ஒன்று இணைத்தும் படித்துப் பார்த்தால் - வேளாண்மையைப் பொறுத்தமட்டில், சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே இருக்கிறது. ஆகவே இந்த அதிகாரத்திற்குள் நுழைந்து மத்திய அரசு சட்டமியற்றியிருப்பதை நாம் வெறுமனே வேடிக்கை பார்க்கவும் முடியாது; ஏற்றுக் கொள்ளவும் இயலாது.
அரசமைப்புச் சட்டம் தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் சாரத்தை மனதிலே கொண்டுதான் இந்த மூன்று சட்டங்களையும் எதிர்த்து ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த இரண்டு வேளாண் சட்டங்களுக்கும் எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்துகிறேன் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.