ஒருவழியா ஸ்டாலின் பேரணியை முடிச்சுட்டாரு! கலந்துக்கிட்டது எத்தனை பேரு? அடுத்து என்ன போராட்டம்?

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் பேரணி எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது.


அடுத்து என்ன போராட்டம் நடத்துவது என்று தெரியாமல் தி.மு.க.வும் கூட்டணிக் கட்சியினரும் யோசனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று, சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை இந்த மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில், ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன், கனிமொழி, தயாநிதி மாறன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் என கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

 குடியுரிமை சட்டத்திருத்தத்தால் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை அகதிகள் பாதிக்கப்படுவதாக கூறி அந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பினர். எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடைபெற்றது. இதற்காக அங்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு மாற்றுப் பாதையில் அனுமதிக்கப்பட்டது. 

பேரணியில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றதால் முன்னெச்சரிக்கையாக போதுமான அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆளில்லாத விமானம் என கூறப்படும் ட்ரோன்கள் மூலம் பேரணியை காவல்துறையினர் கண்காணித்தனர்.

ஒருவேளை அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதை தடுக்கும் பொருட்டு 6 கலவர தடுப்பு வாகனங்கள், 3 தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிந்தன. ஆனால், எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.