ரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கப் போனாராம் இலங்கை விக்னேஸ்வரன்..! என்ன கருமம்டா இது!

இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் ரஜினியை சந்தித்து ஈழத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார், ரஜினி ஈழத்துக்குச் சென்று தமிழர்களை சந்திக்கப் போகிறார், ரஜினியின் விசாவை இலங்கை மறுத்துவிட்டது என்று எத்தனை எத்தனை கதைகள்.


இவை எல்லாமே உண்மை அல்ல என்று கூறியிருக்கிறார் விக்னேஸ்வரன். ரஜினியை நான் சென்று பார்த்து வந்தது உண்மையே. அது ஒரு தனிப்பட்ட விஜயம். அதில் அரசியல் பின்னணி இருக்கவில்லை. பத்திரிகைகளில் கூறுவது போல் நான் ரஜனியை இலங்கைக்கு வருமாறு அழைப்பேதும் விடுக்கவில்லை. சுமார் அரை மணி நேரம் நாங்கள் அளவளாவினோம்.

ரஜினியை சந்திக்க சென்றதும் அவரது அலுவலகத்தில் பாபாஜியின் படமும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் படமும், யோகாநந்த பரமஹம்சரின் படமும், எம் நாட்டு சுவாமி சச்சிதானந்த யோகியின் படமும் சுவரில் தொங்கவிடப்பட்டு இருந்தன. உடனே எங்கள் பேச்சுக்கள் ஆன்மீகப் பெரியார்கள் பற்றியும் உலக நியதிகள், போக்குகள், வாஸ்தவங்கள், நடைமுறைகள், யதார்த்தங்கள் சார்ந்து பேசப்பட்டன.

ரஜினி சம்பந்தமாகப் பலவித கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. எனினும் நான் பின்வரும் குணாதிசயங்களை அவரிடம் நேரில் கண்டேன். அவரின் அன்பு,எளிமை, ஆன்ம விசாரத்தில் உள்ள நாட்டம், குழந்தைகள் போல் வாய்விட்டுச் சிரிக்கக்கூடிய இறுக்கம் தவிர்ந்த சுபாவம், அசைக்க முடியாத இறை நம்பிக்கை, தாமரை மேல் நீர் போன்ற வாழ்க்கை, இயற்கையாகவே உடலிலும் பேச்சிலும் ஒரு வேகம் போன்ற குணாதிசயங்களை அவரிடம் கண்டேன்.

ரஜினி பந்தாவே இல்லாத மனிதர் எனக் கண்டு உண்மையில் வியப்படைந்தேன். சிறிய புகழை, பதவியை அடைந்து விட்டாலே பலர் தலை கால் தெரியாது ஆடுகின்றார்கள். பாரதம் கடந்து ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் மக்கள் மனதில் நிறைந்திருக்கும் ஒரு திரைப்படக் கலைஞர் என்ற முறையில் அவர் பலத்த 'பந்தா' காட்டுவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.

எந்த ஒரு மனிதரையும் அன்புடன் வரவேற்று அளவளாவும் ஒரு பெருந்தன்மையான குணம் படைத்தவராக அவரைக் கண்டேன். ரஜினியைச் சந்தித்ததால் அவரின் உயரிய குணங்களை நான் அறிந்து கொண்டேன். அந்தச் சிறந்த மனிதரின் சந்திப்பை ஒரு பாக்கியமாகக் கருதுகின்றேன் என்று கூறியிருக்கும் விக்னேஸ்வரன், ரஜினியை சந்தித்ததற்கான உண்மையான காரணத்தை ஆஃப் த ரிகார்டாக கூறியிருக்கிறார்.

அது என்ன தெரியுமா? அவரது பேரன்கள் ரஜினியின் ரசிகர்களாம், அவரிடம் ஆட்டோகிராப் வாங்கிவர வேண்டும் என்று கட்டளை போட்டார்களாம். அதைத்தான் ஒரு தாத்தாவாக நிறைவேற்றினாராம். 

அட, போங்கப்பா.