தமிழக அரசுப் பேருந்து ஒன்றில் சாகசம் என்ற பெயரில் பள்ளி மாணவர்கள் செய்த அட்டாகாசங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்களின் ஆபத்தான சாகசம்! பயணிகளை பீதியில் ஆழ்த்தும் கொடூரம்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

பொறுக்கித் தனத்துக்குப் பெயர்தான் வீரம் என நினைக்கும் இளைஞர்கள் இருக்கும் வரை சமூகம் மேன்மையடையப் போவதில்லை என படித்ததை நினைவுறுத்தும் வகையில் இருந்தது மாணவர்களின் செயல். அரசுப் பேருந்து வேகமாக சென்றுக் கொண்டிருந்தது. பேருந்து நிற்கும்போது ஏறினால் வீரத்துக்கு இழுக்கு என்ற சினிமாத்தனமான அறிவீனம் அந்த மாணவர்களை ஆக்கிரமித்திருந்தது.
பேருந்தை துரத்திச் சென்று ஏறுவது, ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதோடு மட்டுமன்றி யோகாசனம் செய்வது போல் தலைகீழாகத் தொங்குவது என பேருந்துப் பயணம் முழுவதும் அவர்களின் அட்டகாசம் தொடர்ந்தது. மாணவர்களின் முட்டாள் சாகசப் பயணத்துக்கிடையே பல வாகனங்கள் பேருந்தின் அருகிலேயே வந்துக்கொண்டிருந்தன.
மாணவர்களின் செயல் சக பயணிகள் ஓட்டுநர், நடத்துநர், வாகன ஓட்டிகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அவர்களின் எச்சரிக்கைகள் மாணவர்களின் காதுகளிலோ மூளையிலோ ஏறவேயில்லை. தங்கள் கருத்துப்படி தங்களின் அதிவீர பராக்கிரமங்களை அவர்கள் வீடியோ எடுத்து, டிக் டாக் ஆப்பில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 8-ம் வகுப்பு முதல் 10- வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் போல் காட்சியளிக்கும் அந்த மாணவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் தெரியவில்லை. கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.