ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியா..? சீமான் நச் பதில்

செக்கிழுத்த செம்மல் நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று செய்தியாளர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.


பாஜகவின் வேல் யாத்திரை என்பது முழுக்க முழுக்க அரசியல் நாடகம்தான். இவ்வளவு நாள் அவர்களின் கண்ணுக்கு தெரியாத எங்கள் முருகனும், வேலும் இப்போது தெரிகிறதென்றால், அதற்குக் காரணம் யார் என்று மக்களுக்குத் தெரியும். அயோத்தியில் இராமரை வைத்து அரசியல் செய்தது போல, கேரளாவில் ஐயப்பனை வைத்து அரசியல் செய்தது போல இங்கு முருகனைக் கையிலெடுக்கிறார்கள். இவர்கள் தலைகீழாக நின்று முருகனைத் தூக்கி சுற்றினாலும், முருகனைக் கொண்டாடுவதால் எங்களுக்குத்தான் நன்மை வந்து சேருமே ஒழிய, அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை.

பீகார் தேர்தல் முடிவுகளைப் பார்க்கையில் மறுபடியும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வென்றுள்ளதாகவே தோன்றுகிறது. பாஜகவினர் இராமரை நம்புவதைவிட வாக்குப்பதிவு எந்திரங்களைத்தான் பெரிதும் நம்புகின்றனர். பாஜகவின் உண்மையான கூட்டணி வாக்குப்பதிவு எந்திரங்களோடுதான். பாஜக, காங்கிரஸ் இரண்டும் கட்சிகள்தான் வெவ்வேறு; கொள்கையளவில் இரண்டும் ஒன்றுதான். பாஜக தீவிர இந்துத்துவா என்றால், காங்கிரஸ் மிதமான இந்துத்துவா.

அவ்வளவுதான் வேறுபாடு. பாஜக கொண்டு வந்தவற்றில் பண மதிப்பிழப்பைத் தவிர சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.ஐ.ஏ, நீட், ஒரே நாடு ஒரே ரேஷன் போன்ற மற்ற எல்லாத் திட்டங்களும், சட்டங்களும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொடங்கி வைக்கப்பட்டதுதான். அதனால்தான், ராகுல்காந்திக்கு பாஜகவை முழுமூச்சாக எதிர்க்க முடியவில்லை.

எந்த ஒரு பொதுச்சொத்தையும் தனியாருக்கு தாரைவார்க்க முனைப்பு காட்டும் மத்திய அரசு; தமிழர்களின் சொத்தான அண்ணா பல்கலைக்கழகத்தை ஏன் தன் அதிகாரத்திற்கு கீழ் கொண்டு செல்லத் துடிக்கிறது? எல்லா துறையையும் தனியார்மயமாக்கும் போது தன்னால் சரிவர நிர்வகிக்க முடியவில்லை; தனியார்தான் சிறப்பாக நிர்வாகிப்பார்கள் எனக் காரணம் கற்பிக்கும் மத்திய அரசு அண்ணா பலகலைக்கழகத்தை கைப்பற்றத் துடிப்பது ஏன்?

அதையும் தனியாரிடம் ஒப்படைக்கவா? தற்போது அதானி ஏர்போர்ட், அதானி அக்ரி வந்துள்ளது போல, சில ஆண்டுகளில் அம்பானி இந்தியா, அதானி இந்தியா என உருவாகிவிடும். இந்தியாவைக் கூறுபோட்டு தனியாருக்கு விற்றுவிட்டார்கள். காங்கிரசுக்கும், பாஜகவிற்கும் இருக்கும் சண்டையே யார் இந்தியாவை சீக்கிரம் விற்று கல்லாக் கட்டுவதென்பதுதான்!

சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நானும் போட்டியிட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்; நானும் நினைக்கிறேன். ஆனால், அதுகுறித்து பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றெண்ணுகிறேன்.

சென்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டுக் கிராமப்புறங்களில் ஏரிகள், கண்மாய்கள், குளம், குட்டைகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றிருப்பதைப் பயணங்களின் போது கண்கூடாகக் காண்கிறேன். தண்ணீரில் தன்னிறைவு என்பது எட்டப்பட்டதாகத் தெரியவில்லை; தண்ணீர் விற்பனைக்கு என்று கொள்கை முடிவெடுத்துவிட்ட அரசு, தண்ணீர்பஞ்சத்தை ஒருபோதும் தீர்க்காது என்று கூறினார்.