சட்டீஸ்கர் மாநிலத்தில் தன்மீது சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்த கணவனை துப்பாக்கியால் சுட்ட மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவனை பலர் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பெண் இன்ஸ்பெக்டர்! பதற வைக்கும் காரணம்!
பதபாரா என்ற இடத்தைச் சேர்ந்தவர் சுனிதா மிஞ்ச். ரயில்வே போலீஸ் படையில் ஆய்வாளராக பணியாற்றி வரும் சுனிதாவுக்கும், ரயில்வே ஊழியரான தீபக் மிஸ்ராவுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் தான் திருமணம் நடைபெற்றது.
கணவரும் ரயில்வே ஊழியர்தான் என்பதால் தங்களுக்குள் கருத்து வேறுபாட்டுக்கோ ஒளிவுமறைவுக்கொ வாய்ப்பில்லை என்றும் பணிச்சுமையையும் மன வலிகளையும் பரஸ்பரம் புரிந்துகொள்ள முடியும் என சுனிதா நம்பினார். ஆனால் அது தப்புக் கணக்கு என சுனிதாவுக்கு புரியும் காலமும் வந்தது.
திருமணமான தொடக்க காலத்திலேயே தீபக்கின் சந்தேகக் கணைகள் சுனிதாவை துளைத்து சின்னாபின்னமாக்கத் தவறவில்லை.தொடர்ந்து தீபக் சுனிதாவிடம் சந்தேகத்தின் அடிப்படையிலேயே பேசவும் தகராறு செய்யவும் தொடங்கியதால் இருவருக்குமான பேச்சு உறவு சண்டையின் வடிவாகத் தான் இருக்கும் என்ற நிலையை எட்டியது.
வாய்மொழியாக தொடங்கும் சிறு விஷயமும் வாக்குவாதத்தில் தான் முடிந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு பதபாரா ரயில் நிலையத்தில், சுனிதா பணியில் இருந்தபோது அங்கு வந்த தீபக் சுனிதாவின் நடத்தை குறித்து தரக்குறைவாகப் பேசிய தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
எல்லை மீறிய கோபமும் தன்மானமும் சுனிதாவை துப்பாக்கியை எடுக்க வைக்கும் என தீபக் சற்றும் எதிர்பார்க்கவில்லை. துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்ட சுனிதா அடுத்த நொடியே தீபக்கை நோக்கி 2 முறையும் சுட்டார். இதில் தீபக் சுருண்டு விழுந்தார்.
இடுப்புப் பகுதியில் புல்லட் பாய்ந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீபக் தற்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். சுனிதாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.