சாத்தான் குளம் மரணத்தை கொச்சைப்படுத்தலாமா? அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பொன்முடி ஆவேசம்

சாத்தான்குளம் மரணத்தை தி.மு.க. அரசியல் செய்கிறது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் தி.மு.க.வின் பொன்முடி.


சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைத்துள்ள அ.தி.மு.க. ஆட்சியில், தற்போது இருக்கும் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள்வரை முன்பு உள்ள ஒரே பணி, ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மறைக்க இவ்வளவு கீழ்த்தரமான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும்வரை- சி.வி.சண்முகம் எங்கே போனார்?

குற்றவியல் நீதிமன்ற நடுவர் அந்த இருவரையும் ரிமாண்ட் செய்தது சட்டப்படி தவறு என்று எங்கும் குரல் ஒலித்த போது சட்ட அமைச்சர் எங்கே தூங்கிக் கொண்டிருந்தார்? “Justice for Jayaraj and Benicks” என்னும் பதாகைகளைத் தூக்கிப் பிடிப்பதும்” “வழக்கின் போக்கைக் குலைப்பதற்கும் அரசியலாக்குவதற்கும் தி.மு.க. சதிசெய்து வருகிறது” என்று “நாடோடித்தனமாக” குறை சொல்லும் சி.வி.சண்முகம், அந்த இருவரின் கொடூரமான மரணத்தை ஈவு இரக்கமின்றி கொச்சைப்படுத்தியுள்ளார்.

அவர்களைக் காவல் நிலையத்தில் அடித்துக் கொன்று விட்டு- அதை மறைக்க லாக்அப் மரணம் இல்லை என்று மறைத்து- உடல் நலக்குறைவு என்று சப்பைக் கட்டு கட்டி - உயர்நீதிமன்றம் தலையிடும்வரை கைது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து - நீதிபதியை மிரட்டியவர்களை “காத்திருப்போர் பட்டியலில்” கொண்டு வந்து விட்டு- பிறகு சில மணி நேரங்களிலேயே அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி மிகப்பெரிய சதித் திட்டத்தில்- சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது காவல்துறைக்கு பொறுப்பான முதலமைச்சரும், சட்டத்துறை மற்றும் நீதித்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சி.வி.சண்முகமும்தான்! 

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120-க்குத் தேவையான அனைத்தையும் செய்திருப்பது இந்த அரசும், ஆதரித்து அறிக்கை விடும் அமைச்சர்களும்தான்! ஏழை அழுத கண்ணீர் உயர்நீதிமன்ற நீதியரசர்களிடம் முதற்கட்ட நீதியைப் பெற்றுத் தந்திருக்கிறது. அதை இதுபோன்ற அறிக்கைகள் மூலம் அமைச்சர் சி.வி.சண்முகம் போன்றவர்கள் தடுக்காமல் இருந்தாலே- நீதி நிலைநாட்டப்படும்! 

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும் பாராமல் திருமதி. சந்திரலேகா அவர்கள் மீது ஆசிட் வீசியது, ஆடிட்டர் திரு. ராஜசேகரனை கொடூரமாகத் தாக்கியது, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த மறைந்த டி.என்.சேசன் அவர்களைத் தாக்கியது,

மாநிலத்தின் ஆளுநராக இருந்த மறைந்த சென்னா ரெட்டி அவர்களை இதே திண்டிவனத்தில் வழி மறித்துத் தாக்குதல் நடத்தியது, சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தூத்துக்குடி ரமேஷை உருட்டுக் கட்டையால் அடித்து நொறுக்கியது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. பாலனை “வாக்கிங்” போன போது “கூலிப்படை” வைத்து கொலை செய்தது- டாக்டர் திரு. சுப்ரமணியன் சுவாமிக்கு உயர்நீதிமன்றம் என்றும் பாராமல் அ.தி.மு.க. மகளிரணி ஆபாச ஆட்டம் போட்டுத் தாக்கியது, நேர்மையான உயர்நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் அவர்களின் வீட்டிற்கு மின்சாரத்தைக் கட் பண்ணியது, உயிரோடு தர்மபுரி மாணவிகளை எரித்துக் கொன்றது,

கொடநாட்டில் கொலை- கொடநாட்டில் கொள்ளை- அந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க உதவும் சாட்சிகள் அடுத்தடுத்து கொலை- பொள்ளாச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு என்று “ரவுடித்தனமும்” “கொலைகளும் அரங்கேறுவதும்- தர்மபுரி மாணவிகளை எரித்துக் கொன்றவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்!

ஏன், டாக்டர் திரு. ராமதாஸ், திரு. அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது கொலைப்பழி சுமத்தி விட்டு- தனது தம்பி மைத்துனரான முருகானந்தம் கொலை செய்யப்பட்டதை மறந்துவிட்டு தைலாபுரம் விருந்துக்குப் போனது யார்? இதே சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும், அவரது முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியும்தானே! 

“காருக்கு அடியில் ஒளிந்து நான் உயிர் தப்பினேன்” என்று உயர்நீதிமன்றத்தில் கதறி முறையிட்டு- அந்தக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய சி.வி.சண்முகம் – அக்கட்சியுடன் எடப்பாடி திரு. பழனிசாமி கூட்டணி வைத்த போது அமைச்சர் பதவிக்காக கை கட்டி நின்று- கும்பிடு போட்டவர்தானே; இன்றும் கும்பிடு போட்டு அரசு கஜானாவைக் கொள்ளையடித்துக் கொண்டிருப்பவர்தானே! 

ஆகவே, “நெறி சார்ந்த அரசியலுக்கு” துளியும் இலக்கணம் இல்லாத அமைச்சர் சி.வி. சண்முகம் எங்கள் கழகத் தலைவரின் நெறி சார்ந்த அரசியலைக் கேள்வி கேட்கத் தகுதியும் இல்லை; தார்மீக உரிமையும் இல்லை என்றும், உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின்படி ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையில் தொடர்புடையவர்கள், உதவியவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.