காஷ்மீரில் சி.ஆர்.பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் பெண்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவுக்கு நாங்க இருக்கோம்! காஷ்மீர் தாக்குதலை கண்டித்து பொங்கி எழும் பாகிஸ்தான் பெண்கள்!

தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கவில்லை என பழைய பல்லவியையே பாடிக் கொண்டு பாகிஸ்தான் அவ்வப்போது தனது கோழைத் தனத்தைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
அதில் மிகப் பெரிய கோழைத் தனமாக புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்களை பலிவாங்கிய தீவிரவாதத் தாக்குதல் அமைந்தது.
தாக்குதல் இந்தியா முழுதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உலக நாடுகள் வன்மையாக கண்டித்தன.
இந்த கோரத் தாக்குதலுக்கு காரணம் நாங்கள் தான் என பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமது பொறுப்பேற்று கொண்டது. பாகிஸ்தானிற்கு வழங்கப்பட்ட வர்த்தக ரீதியாக அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது.
இதை அடுத்து இரு நாட்டு உறவுகளில் உச்சகட்டப் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் இறுக்கமான நிலைப்பாட்டை மீறி அந்நாட்டின் மென்மையான வளைகரங்கள் இந்திய மக்களுடன் நட்புக்கரம் நீட்டியுள்ளன.
இந்தியா மீதான தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும்,ஒரு போதும் தீவிரவாதத்தை ஆதரித்தது இல்லை என்றும் #AntiHateChallenge என்ற ஹேஷ்டேக்கை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் பாகிஸ்தான் பெண்கள்.
ஷேய்ர் மிர்சா என்ற பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் தொடங்கிய இந்த ஹேஷ்டேக் வேகமாக பரவி வருகிறது. ஷேய்ர் மிர்சா தனது முகநூல் பக்கத்தில் இந்திய வீரர்கள் மீதான தாக்குதல் தன்னை மனதளவில் வெகுவாக பாதித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் இருப்பவர்களும் சகோதர சகோதரிகள் தான் என்றும், அவர்களோடு இணைந்து நிற்கவும், அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவுமே ஹேஷ்டேக் உருவாக்கபட்டதாகவும் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் பல பெண்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டு வருகின்றன. நான் ஒரு பாகிஸ்தானி. நான் புல்வாமா தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்று சேர்வோம்,
என எழுதப்பட்ட பதாகைகளுடன் தாங்கள் இருக்கும் படங்களை அவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் இருந்தும் அவர்களுக்கு நட்புக் கரம் நீட்டப்பட்டுள்ளது.
எந்த நாட்டு மக்களும் தீவிரவாதத்திற்கு துணை போவதில்லை என்றும், பாகிஸ்தானில் இருப்பவர்களும் எங்களது நண்பர்களே எனவும், இந்தியத் தரப்பில் இருந்து பதிவுகள் அதிகரித்துள்ளன.