ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! 8 கிலோ எடை குறைந்த பரிதாபம்!

சிறையில் 100வது நாளை ப.சிதம்பரம் கொண்டாடுவது நிச்சயம் என்பது போன்றுதான் இன்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைந்திருக்கிறது. மீண்டும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.


ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம். அவருக்கு சி.பி.ஐ. வழக்கில் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

ஆனால், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், அமலாக்கத்துறையினர் பிடியில் டெல்லி திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இன்று அதன் மீது நடந்த விசாரணையில், ப.சிதம்பரத்தின் ஜாமின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அப்போது, பொருளாதார குற்றத்தை தீவிரமாக கருத வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரத்தின் உடல் சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார்கள் என்றாலும், அவருக்கு திடீரென 8 கிலோ வரை எடை குறைந்திருப்பது ஆபத்தின் அறிகுறி என்று குடும்பத்தினர் சோகமாக உள்ளனர்.