தமிழர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வடக்கன்கள்! மோடி – எடப்பாடி சதி! தோலுரிக்கும் ஸ்டாலின்!

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வட மாநில இளைஞர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் பரபரபபு குற்றஞ்சாட்டியுள்ளார்.


இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 80 லட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக வேலையே கிடைக்காமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் போது, இங்குள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட மாநிலத்தவருக்கு அத்தனை வேலை வாய்ப்புகளையும் வாரி வழங்கிவரும் பச்சை துரோகச் செயலுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனிதநேயமின்றி தட்டிப் பறிக்கும் கொடும் செயல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு - குறிப்பாக கடந்த ஐந்து வருட காலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பல மடங்கு பெருகி விட்டது மிகுந்த வேதனையளிக்கிறது. சமீபத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்பயிற்சி (Apprenticeship) பெற நடைபெற்ற தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டு, வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தமிழக இளைஞர் கண்ணில் சுண்ணாம்பைத் தடவும் நிகழ்வாகும். 

கோவை, சென்னை உள்ளிட்ட ரயில்வே அலுவலகங்களிலும் இந்த அநீதி நம் மாநில இளைஞர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வருகிறது. அந்த அலுவலகங்களில் நடைபெற்ற 2600 நியமனங்களில் 2300 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

க்ரூப் “டி” பிரிவிற்கு ரயில்வே தேர்வு வாரியம் நடத்திய தேர்விலும் நம் மாநில மாணவர்களைப் புறக்கணிக்கும் விதத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள், புதிய பணியிடங்கள் எல்லாம் வட மாநிலத்தவருக்கே முழு குத்தகைக்கு விடப்பட்டது போன்ற அவல நிலைமையை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு உருவாக்கியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியும் துணை போனதோடு மட்டுமில்லாமல் - பா.ஜ.க.வுடன் கூட்டணியும் வைத்து தமிழக இளைஞர்களை வஞ்சித்துள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.