சீமானுக்குத்தான் கரோனா வைரஸ் மீது எத்தனை அக்கறை..? மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கலைன்னா போராட்டம் நடத்துமோ நாம் தமிழர்?

சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவாகி சீனா முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற சூழ்நிலையில், வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்குதலில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 12000-த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்தப் பட்டியலில் இப்போது இந்தியாவும் சேர்ந்துள்ளது என்று கவலையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார் சீமான். இந்த வைரஸைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளை சீன அரசு மட்டுமன்றி, தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற எல்லா நாடுகளும் பல்வேறு வழிகளில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிற இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடும், உலகின் மோசமான பொது சுகாதாரத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றானதுமான இந்திய நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தொடக்கம் முதலே இந்தப் பிரச்சனையை அணுகுவதில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவது கண்டிக்கத்தக்கது.

டிசம்பர் மாத இறுதியில் இந்த மர்ம நோய் குறித்து கண்டறிந்த சீன அரசின் தகவலையடுத்து சனவரி முதல் வாரத்தில் உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சகங்களுக்கும் இதனைத் தெரியப்படுத்தியும்கூட இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதுகுறித்து எந்த விதமான பொது அறிவிப்பையும் வெளியிடாமல் மக்களிடமிருந்து மறைத்ததும், இந்நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததும் ஏன் என்ற கேள்வி எழாமலில்லை.

நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மற்ற மேலை நாடுகளில் கடைபிடிக்கப்படும் உச்சபட்சப் பாதுகாப்பு, கட்டுப்பாடுகளுடன் கூடிய நடைமுறைகளையோ, சர்வதேச சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள நோய்த்தடுப்பு நடைமுறைகளையோ முறையாகக் கடைபிடிக்காமல், நோய்த்தொற்று எளிதில் ஏற்படும் வகையில் சீனாவிலிருந்து இந்தியா வருபவர்களை விமான நிலையங்களில் பயணிகள், பணியாளர்கள் இருக்கும் இடங்களுக்கு அருகிலேயே வைத்து மருத்துவ நடைமுறைகளை மேற்கொள்வதும்,

பிறகு அங்கிருந்து வந்தவர்களை மக்கள் வசிக்கும் அவர்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி வைப்பதும், நோய்த்தொற்று சந்தேகத்திற்கு இடமானவர்களை அவர்களின் வீடுகளுக்குள்ளேயே வைத்து சிகிச்சை அளிப்பதும் மத்திய, மாநில அரசுகள் இன்னும் இதன் தீவிரத் தன்மையை உணராததையே காட்டுகிறது.

தற்போது கரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதார அமைப்பு. இந்த அறிவிப்பிற்குப் பிறகும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இது குறித்து நாட்டு மக்களுக்கு எந்தவித விளக்கத்தையும் கொடுக்காதது ஒரு அக்கறையற்றத் தன்மையையே வெளிப்படுத்துகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் இதன் பாதிப்பு உணரப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசும் இதுகுறித்து எந்தவித உடனடி தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருப்பது போல் தெரியவில்லை.

இத்கைய அபாயகரச் சூழலில் மக்கள் வெளிநாடுகள் மற்றும் வெளியூர் பயணங்களைத் தவிர்க்குமாறும், கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்வதை தவிர்க்குமாறும், கூடுமான வரை அடிக்கடி கைகளை நன்கு கழுவி சுத்தத்துடன் வைத்திருக்கவும் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் சீமான்.