திருவள்ளூர்: புத்தாடை வாங்க கணவன் காசு தராததால், மகனின் கழுத்தை தாய் ஒருவர் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் பயங்கரம்! பெற்ற மகன் கழுத்தை அறுத்த கொடூர தாய்!

திருவள்ளூரை அடுத்த, திருமுல்லைவாயலில் பானுபிரசாத் - மம்தா ஆகியோர் வசித்து வருகின்றனர். கணவன், மனைவியான இவர்கள், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது வேலை, அம்பத்தூரில் பானிபூரி விற்பதுதான். குறைவான வருமானம் என்பதால், மிகவும் வறுமையில் தவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் மகன் ராஜ்க்கு, சமீபத்தில் பிறந்த நாள் வந்துள்ளது. அதற்கு, புத்தாடை வாங்கி தரும்படி, மம்தா தனது கணவரை கேட்டுள்ளார். ஆனால், பணம் இல்லாதால், பழைய உடையை அணிந்துகொள்ளும்படி பானுபிரசாத் மகனிடம் கூறியுள்ளார்.
இதனால், மம்தா கடும் மன விரக்தி அடைந்துள்ளார். பிறந்த நாளன்று கூட புத்தாடை வாங்கி தர முடியாத உனக்கு எதற்கு மனைவி, குழந்தை என்று கூறியபடி, அவர், தனது மகனின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர், தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டுள்ளார். இதை பார்த்ததும் பானுபிரசாத் அதிர்ச்சியடைந்து, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.
அவர்களின் உதவியுடன், தாய், மகளை மீட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.