ஒன்னே முக்கால் மணி நேரம்! முகமூடியுடன் 2 பேர்! மிளகாய் பொடி! லலிதா ஜூவல்லரி மொட்டை அடிக்கப்பட்டதே இப்படித்தான்!

திருச்சியில் லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் சுவற்றை துளையிட்டு 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி 5 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 6 காவலாளிகள் கடைக்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். காலையில் கடையை திறந்து பார்த்த போது, நகைகள் மாயமாகி இருப்பது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், கடையில் ஆய்வு மேற்கொண்டனர். கடையின் மேற்கு பகுதியில் சுவற்றியில் துளையிடப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். ஒரு ஆள் நுழையும் அளவுக்கு போடப்பட்டிருந்த அந்த துளை வழியாக உள்ளே சென்று மர்மநபர்கள் நகைகளை கொள்ளை அடித்திருப்பதாக போலீசார் கூறினர். 

சம்பவத்தில் வடமாநிலக் கொள்ளைக் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு 40 முதல் 50 கோடி ரூபாய் வரை இருக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

இரவுப் பணியில் இருந்த காவலாளிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நகைக் கடை வளாகம் மற்றும் கடைக்குள் இருக்கும் சிசிடிவிக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். 

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரிக்கும் பணி நடைபெற்றது. ஆனால் மோப்ப நாய் மோப்பம் பிடிக்க முடியாத வகையில் கொள்ளையர்கள் வழியெங்கும் மிளகாய் பொடியை தூவிச் சென்றுள்ளனர். திருச்சியில் பரபரப்பான இடத்தில் உள்ள நகைக் கடையில் நடைபெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.