திரைப்படத் தயாரிப்பில் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக ஐங்கரன் இண்டர்நேஷனல் உரிமையாளர் கருணாமூர்த்தி மீது லைகா நிறுவனம் புகார் அளித்துள்ளது.
விஜய், சிம்பு, கமல் படங்கள் மூலம் ரூ.120 கோடி ஸ்வாகா! இளம் பெண் வழக்கறிஞர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!
தமிழ் திரையுலகின் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருவது லைகா நிறுவனம் பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்து வந்துள்ளது. இந்நிலையில் திரைப்பட தயாரிப்பில் சுமார் 120 கோடி ரூபாய் மோசடியும் 60 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்திக் கொடுத்த ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளரான கருணா மூர்த்தி என்பவர் மீது லைகா நிறுவனம் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளது.
லைகா நிறுவனத்தின் ஆலோசகராக பொறுப்பில் இருந்தவர் கருணாமூர்த்தி இவர் தன்னிச்சையாக செயல்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், படத்தயாரிப்பு நிதி நிர்வாகங்களில் தலையிட்டு பண மோசடி செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
லைகா தயாரிப்பில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான கத்தி மற்றும் யோகி பாபு மற்றும் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா போன்ற படங்களின் வெளிநாட்டு உரிமம் சாட்டிலைட் உரிமம் போன்றவற்றை அனுமதியில்லாமல் தனது ஐங்கரன் நிறுவனம் மூலம் விற்று 90 கோடி ரூபாய் கையாடல் செய்திருப்பதாகவும் புகாரில் லைகா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை கருணாமூர்த்தி தன்னிச்சையாக செயல்பட்டு தயாரித்து பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகவும் அவ்வாறே கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் - 2 படத்தை அனுமதியில்லாமல் தயாரித்து பெரும் இழப்பை ஏற்படுத்தியதால் அந்த படத்தின் தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் பானு என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவரிடம் இது குறித்து விளக்கம் கேட்டபோது இதுவரை கருணாமூர்த்தி எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.