சென்னை கோயம்பேடு அடுத்த சின்மையா நகரில் திருமண நிச்சயம் நடைபெற இருந்த நிலையில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டு நாளில் திருமண நிச்சயம்! இரவு உறங்கச் சென்ற இளம் பெண் எடுத்த விபரீத முடிவு! அதிர வைக்கும் காரணம்!

சின்மயா நகர் குலசேகரபுரம் வேதா சாலையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் பிரியங்காவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாப்பிள்ளை பார்க்கப்பட்டு செப்டம்பர் 9ம் தேதி நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு இரு வீட்டாரும் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால் பிரியங்காவுக்கு தற்போது திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. தனக்கு திருமணம் செய்து கொள்ள தற்போது விருப்பம் இல்லை என பலமுறை பிரியங்கா கூறியபோது பெற்றோர் கேட்காமல் நிர்பந்தம் செய்துள்ளனர். இதனால் நேற்று மாலை குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இரவு தனது அறைக்கு சென்ற பிரியங்கா திடீரென கதவை சாத்திக்கொண்டார். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட நேரம் ஆகியும் பிரியங்கா வெளியில் வராமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்தார் அவரது தந்தை ராமகிருஷ்ணன்.
அப்போது பிரியங்கா மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இறந்து விட்டிருந்தார். தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீஸ் பிரியங்கா உடலைக் கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்து வைக்கும் முன் பிள்ளைகள் விருப்பத்தை பெற்றோர் கேட்பதில்லை. இதுபோன்ற உயிரிழப்புகள் நடந்த பிறகு விருப்பத்தை நிறைவேற்ற பிள்ளைகள் உயிரோடு இருப்பதில்லை.