கிருஷ்ணகிரி அருகே தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்து காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய மாணவி முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
மாப்பிள்ளைக்கு ஜூசில் மயக்க மருந்து! பிறகு மணப்பெண் காதலனுடன் சேர்ந்து செய்த விபரீதம்!

ஊத்தங்கரை அடுத்த சென்னப்ப நாயக்கனூரைச் சேர்ந்த கோவிந்தராஜன் மகள் ஜான்சிராணி. தனியார் மகளிர் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த ஜான்சிக்கும், அவரது தாய்மாமன் மகன் சரவணன் என்பவருக்கும் திருமணம் செய்ய கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் ஃபேஸ்புக்கில் திருச்சியைச் சேர்ந்த ஒரு இளைஞனை ஜான்சிராணி காதலித்து வந்ததால் திருமணத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ஊரில் திருவிழா நடந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரவணனை ஜான்சிராணி வீட்டிற்கு அழைத்துள்ளார்.
வீட்டிற்கு வந்த சரவணனுக்கு மயக்க மருந்து கலந்து வைத்த ஜூஸ் கொடுத்த ஜான்சிராணி, பின்னர், காற்றோட்டமாக வெளியில் சென்று பேசலாம் என்று சரவணனை தனியே அழைத்துச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் சரவணன் மயக்கம் அடைந்து கீழே விழவே, அங்கு மறைந்திருந்த தனது காதலனுடன் சேர்ந்து கொண்டு கையில் கிடைத்ததெல்லாம் வைத்து அவரை ஜான்சிராணி தாக்கியுள்ளார்.
சரவணன் ரத்தக் காயங்களுடன் சாலை ஓரம் கிடப்பதைக் கண்ட உறவினர்கள், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின்னர் சரவணனுக்கு சுய நினைவு திரும்பியவுடன் போலீஸ் விசாரணையின் போது தான் ஜான்சிராணியின் திட்டம் அம்பலமானது. இதனை அடுத்து கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஊத்தங்கரை போலீஸ் ஜான்சிராணியைக் கைது செய்தது மேலும் அவரது பேஸ்புக் காதலனையும் தேடி வருகின்றனர்.