ஆர்டர் செய்தால் 15 நிமிடத்தில் சைக்கிளில் உணவு டெலிவரி! கரூரை கலக்கும் கல்லூரி மாணவன் ரகு!

கரூரில் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக கல்லூரி மாணவர் ஒருவர் சைக்கிளில் சென்றே உணவு விநியோகம் செய்து தங்கையை படிக்க வைக்கிறார்.


எங்கிருந்து ஆர்டர் செய்தாலும் அதிகபட்சம் உணவை 15வது நிமிடத்தில் டெலிவரி செய்துவிடுகிறார் கல்லூரி மாணவரான உழைப்பாளி. எதிர்கால கனவுகளுடன் கல்லூரி மாணவர்கள் பலர் சாதாரண வேலையை மதிப்பதில்லை.

எழுத படிக்கத் தெரியாதவர்கள் செய்ய வேண்டிய வேலையை நாம் செய்தால் நம்மை தரம் தாழ்ந்து பார்ப்பர் என்று வெட்கப்பட்டு வாழ்க்கையை வறுமையிலேயே கழித்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் கரூரில் மாணவரின் துணிச்சலான பணியை அனைவரும் பாராட்டுகின்றனர்.

பொன்னுசாமி, ரேவதியின் மகன் பெயர் ரகுநாத். அவருக்கு கற்பகவள்ளி என்ற தங்கை 6ம் வகுப்பு படித்து வருகிறார். சொந்த நிலம் கூட இல்லாத நிலையில் ரகுநாத்தின் குடும்ப வருமானம் 11,000 மட்டுமே. இதில் 4 பேருக்கு உணவு, படிப்பு, துணிமணி எல்லாமே அடங்கியாக வேண்டும்.

இதனால் குடும்பத்தின் சூழ்நிலையை மனதில் கொண்டு 11ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே வேலைக்கு செல்லத் தொடங்கினார் ரகுநாத். பின்னர் ரகுநாத் கல்லூரியில் பி.சி.ஏ படிப்பை தேர்வு செய்தார். பிரபல உணவு டெலிவெரி ஸ்டார்ட் அப் கம்பெனியில் பகுதிநேர ஊழியராக வேலைக்கு சேர்ந்த ரகுநாத் நாள்தோறும் கல்லூரி முடிந்தவுடன் இரவு 11 மணிவரை வேலை செய்கிறார்.

கல்லூரி படிக்கும்போது ஏன் இந்த வேலை என சக மாணவர்கள், ஊழியர்கள் வேலி செய்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாது உழைத்து முன்னேறுகிறார் ரகுநாத். தற்போது மாதம் 4,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.