அதிகார நோக்குடனும், மக்கள் நலன் மீதான அலட்சியத்துடனும் அரசு இருந்தாலும், நம் கடமை ஆக்கப்பூர்வமாக செயல் படுவதே என்று மக்கள் நலன் கருதி கமல்ஹாசன் 10 கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
கமல்ஹாசன் எழுப்பிய 10 கேள்விகள்.! நீட் முதல் கொரோனா வரை..

1. நீட் தேர்வு தேவை இல்லை :
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற முயற்சி எடுக்காமலும் நீட் தேர்விற்கு தடை வாங்குவதற்கு இருக்கின்ற நேர்மையான காரணங்களை வைத்து மத்திய அரசினை வழிக்கு கொண்டு வராமலும் மாணவ மாணவியருக்கு தேர்வுக்கான முறையான பயிற்சியும், தன்னம்பிக்கையும் தரத்தவறிய இந்த அரசால் இன்னும் எத்தனை மரணங்களை தமிழகம் தாங்கும்? நிவாரணம் கொடுப்பதன் மூலம் பிரச்னையை மூடி மறைக்க நினைக்கிறதா தமிழக அரசு?
2. கிஸான் திட்ட முறைகேடு:
வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கான உதவித்தொகையை உண்மையான பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்க தவறியதன் மூலம், தன் ஊழல் முகத்தை கொரோனா காலத்தில் கூட அரசு காட்டுவது முறையா?
3. ஆன்லைன் கல்வி முறைப்படுத்துதல்:
ஆன்லைன் கல்வி முறையினை முறைப்படுத்தாமலும், அதற்கான தொழிற்நுட்ப தேவைகளை மேம்படுத்துவது போன்ற மிக முக்கியமான திட்டங்களை முன்வைக்காமலும் அரசு அலட்சியப்போக்கு காட்டுகின்றது. இவற்றை நெறிப்படுத்த இந்த அரசு என்ன செய்யப்போகின்றது?
4. கொரோனா முறைகேடுகள்:
முன் எச்சரிக்கை இல்லை, பாதுகாப்பு நடவடிக்கைகளில் முறையான சிந்தனை இல்லை, மக்களை கைகளை கழுவச் சொன்ன அரசு, இப்போது மக்களையே கைகழுவி விட்டது ஏன்? கொரோனவால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களுக்கு அரசு சொல்லும் பதில்தான் என்ன ?
5. எட்டு வழிச்சாலைக்கு எதற்காக இத்தனை அவசரம்?
கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலும். விவசாயத்துறையில் 3.4 சதவீதம் வளர்ச்சி எட்டிய நிலையில், எட்டு வழிச்சாலையை அமல்படுத்த ஏன் இந்த அரசு துடிக்கிறது?
6. மீனவர்கள் பாதுகாப்பு:
பருவகால மழையினாலும் புயலினாலும் முதலில் பாதிக்கப்படுபவர்கள் மீனவர்களே. எனவே அவர்களின் பாதுகாப்பு, மற்றும் அவர்களின் தொழில் பாதுகாப்பிற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்த அரசு எப்போது கவனம் செலுத்தும்?
7. வேலைவாய்ப்பின்மை:
வரலாறு காணாத GDP சரிவில் இருந்து மீள,வேலை வாய்ப்புகள் உருவாக்க என்று என்ன திட்டம் இந்த அரசு வைத்துள்ளது?
8.மத்திய அரசிடம் இருந்து GST தமிழகத்திற்கான பங்குகளை பெறுவதில் அழுத்தம் ஏன் இல்லை? மாநில அரசு அழுத்தம் தராமல், மத்திய அரசிடம் நிதி பெறுவது சாத்தியம் இல்லை. GDP வீழ்ச்சியால், GST பங்கை பெறும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர யோசிப்பது ஏன்?
9. அம்மா அரசாங்கம் டாஸ்மாக்கை எப்பொழுது மூடத்துவங்கும்?
அரசின் வருவாய்க்கு ஏழை மக்கள் வயிற்றில் அடிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை கொரோனா காலத்திலும் திறந்து, மக்களிடமிருந்து பணம் பிடுங்க ஏற்பாடு செய்தீர்கள். எப்போது உங்கள் அம்மா சொன்னதை போல், டாஸ்மாக் மூடுவதை தொடங்கப் போகிறீர்கள்?
10. பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
மேடு பள்ளமான சாலைகள், முறையற்ற மற்றும் பணி முடியாத மழைநீர் வடிகால் கால்வாய்கள், பரவும் டெங்கு...பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்து இருக்கிறீர்கள்? இது போன்று மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்காமல், குறுகிய காலத்தொடரென்று, இவ்வளவு குறுக்கி, மூன்றே நாட்களில் கண்துடைப்பாக சட்டமன்றத் தொடரை நடத்தி முடிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் கமல்ஹாசன்.