ஐ.ஐ.டி. என்றாலே பார்ப்பனர்கள் ராஜ்ஜியம்தானா? வீரமணி ஆவேசம்!

சென்னை ஐ.ஐ.டியில் படித்து வந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டதுபற்றி விசாரணை தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆவேச அறிக்கை வெளியிட்டுள்ளார்.


சென்னை ஐ.ஐ.டி.யில் முதலாம் ஆண்டு முதுகலை வகுப்பில் பயின்று வந்த கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த சனிக்கிழமை அய்.அய்.டி. வளாகத்தில் உள்ள விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

தனது துறையில் இணைப் பேராசிரியராக உள்ள சுதர்ஷன் பத்மநாபன்தான், தனது மரணத்திற்குக் காரணம் என்று அவர் தனது தற்கொலைக் குறிப்பை கைப்பேசியில் பதிவிட்டுள்ளார்.

மாணவி பாத்திமா அறிவாற்றலில் சிறந்து விளங்கியவர் ஆவார். இதன் காரணமாக அய்.அய்.டி. நடத்திய நுழைவுத் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவது மாணவியாகத் தேர்வாகி முதுகலை மானிடவியல் வகுப்பில் சேர்க்கப்பட்டார். வகுப்பிலும் அவர் முதல் மாணவியாகத் திகழ்ந்தார் என்று அவரது துறைப் பேராசிரியர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.

மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கூறுகையில், ‘தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவர் கோழையாக இருந்ததில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் ஜாதி மற்றும் மத ரீதியான பாரபட்சத்தைப் பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் தரப்பினரிடமிருந்து பாத்திமா எதிர்க்கொண்டார் என்றும், தனது பெயர் முஸ்லிமாக இருந்ததே அங்கு பிரச்சினையாக இருப்பதாகத் தனது மகள் குறிப்பிட்டதாகவும் அவரது தந்தை அப்துல் லத்தீப் குறிப்பிட்டுள்ளார்! என்னே கொடுமை!!

ஒவ்வொரு தேர்விலும் ஒரு முஸ்லிம் மாணவி முதலிடம் பெறுவது அங்குள்ள பலருக்கும் ஒரு எரிச்சலை ஏற்படுத்தியது என்றும் அப்துல் லத்தீப் குற்றம் சாட்டியுள்ளார். பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் எடுக்கும் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் அளிக்கப்பட்டதையும், அதுகுறித்து துறைத் தலைவரிடம் பாத்திமா புகார் அளித்து பின்னர் அது திருத்தப்பட்டதையும் அப்துல் லத்தீப் எடுத்துக் காட்டுகிறார்.

தொடர்ச்சியாக சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவர்கள் தற்கொலைப் படலம் ஏனோ தொடர்ந்து வருகிறது. ஐ.ஐ.டி. என்றாலே பார்ப்பனர்கள் ராஜ்ஜியம்தானா? மற்றவர்கள் உள்ளே நுழையக் கூடாது என்று எழுதப்படாத அறிவிப்பு அங்கு உள்ளதா?

இது ஒன்றும் புதிதல்ல. ஐ.ஐ.டி.யிலும், உயர் கல்வி நிறுவனங்களிலும் தற்கொலை செய்து கொள்பவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும், சிறுபான்மையினராகவுமே இருப்பது ஏன்? 

2007 முதல் கடந்த ஜூன் வரை தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் 23 பேர் உயர்கல்வி நிறுவனங்களில் பலியாகி உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்களும் இத்தகைய நிகழ்வுகளில் பலிகடாக்கள் என்பது இம்மரணங்களுக்குப் பின்னால் உள்ள ஜாதி, மதவெறியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபோல, சென்னை ஐ.ஐ.டி.. என்ன மர்ம தேசமா?ஆர்.எஸ்.எஸ். அக்கிரகார வளையமா? மத்திய - மாநில அரசுகள் இதனை அலட்சியமாகக் கருதக் கூடாது - முடியாது. வீண்கெட்ட பெயரைத் தவிர்க்க முயலுங்கள். உயர்கல்வி நிறுவனங்களில் இத்தகைய நிலைமை நீடிப்பதற்கான முக்கியமான காரணம், பேராசிரியர், பணியாளர் நியமனங்களில் அங்கு இட ஒதுக்கீட்டின் படி பணியிடங்கள் நிரப்பப்படாததுதான்.

உரிய பிரதிநிதித்துவம் இல்லாமலும், ஆற்றுவார் - தேற்றுவாரில்லாமலும், வழிகாட்டவும், வலியைப் புரிந்து கொண்டு உடன்நின்று குரல்கொடுக்கவும் கூட இயலாமல் தனிமைப்படுத்தப்படும் பயத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பேராசிரியர்களே தவிக்கும் நிலையே ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளது.

18 விழுக்காடு இருக்கவேண்டிய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 2 விழுக்காடு அளவுகூட நிரப்பப்படவில்லை; 7.5% நிரப்பப்படவேண்டிய பழங்குடியினருக்கு அரை விழுக்காடு கூட பணி வழங்கப்படவில்லை. 27% பெற்றிருக்க வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் 10% கூட பணியமர்த்தப்படவில்லை. ஆனால், பார்ப்பனர்கள் பெரும்பான்மையாக நிரம்பிய உயர்ஜாதியினர் ஏறத்தாழ 87% இடங்களை ஆக்கிரமித்துள்ளனர் என்றால், இந்த சமூக நீதி மறுப்பு தானே உயிர்களைப் பலி வாங்கும் அளவுக்குக் கொண்டு சென்றுள்ளது என்பதை மறுக்க முடியுமா?

தமிழ்நாடு அரசு இதற்கு முதன்மையான அளவில் முக்கியத்துவம் கொடுத்து, உரிய முறையில் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தருவது அவசியமாகும். இல்லையெனில் போராட்டம் தவிர்க்கப்பட முடியாதது என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.