கோவில்களில் கும்பாபிஷேகம் ஏன் செய்யப்படுகிறது தெரியுமா?

கோவில் கும்பாபிஷேகம் அதிகம் பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால், கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் என்று பலருக்கும் தெரியாது.


கும்பாபிஷேகத்தின் வகைகள்:-

ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது. அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது. புனராவர்த்தம் – கருவறை, பிரகாரம், கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

அந்தரிதம் – கோவில் உள்ளே ஏதேனும் தகாதது நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் பரிகார பூஜை. கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் அவசியமான பூஜைகள் பற்றிய விளக்கம். அனுக்ஞை – (அனுமதி வாங்குதல்) செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் (புரோகிதர்) தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

சங்கல்பம் – இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல். பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை. பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல். கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல். வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை. வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல். பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செய்தல் {துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு செய்யப்படும் பரிகாரம்}.

மிருத்சங்கிரஹணம் – {மண் எடுத்தல்} அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில் இருந்து மண் எடுத்து அந்த பள்ளத்தில் அபிஷேகம் செய்தல் { ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்டப்படுத்தியதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் சாந்தி பரிகாரம்}.

அங்குரார்ப்பணம் – {முளையிடுதல்} எடுத்த மண்ணில் விதைகளை யிட்டு முளை வளர செய்தல் இதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.

ரக்ஷாபந்தனம் – {காப்புக்கட்டுதல்} பூஜைகளை செய்யும் ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் எவ்வித இடையூறுகளும் வராதபடிக் காத்தற் பொருட்டு அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல். கும்ப அலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல். கலா கர்ஷ்ணம் – {சக்தி அழைத்தல்} விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.

யாகசாலை பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல். சூர்ய, சோம பூஜை – யாகசாலையில் சூரிய சந்திரனை வழிபடுதல். மண்டப பூஜை – அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல். பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல். நாடி சந்தானம் – யாகசாலை இடத்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல் {இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இணைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்}

விசேஷ சந்தி – 36 தத்துவ தேவதைகளுக்கும் பூஜை செய்வது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது. பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல். ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல். அஷ்டபந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல் இதை மருந்து சாத்துதல் என்பர்.

பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல். கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார். மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.

மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48 நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது. மற்றும் சில ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைத்தல் பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல் நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்

உத்தம பக்ஷம் – 33 குண்டம் அமைத்தல் கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தனை தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது 2 காலம், 4 காலம், 8 காலம், 12 காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.