தூர் வாரும் பணியில் மோசடி... போராட்டத்தில் இறங்கும் விவசாய அமைப்புகள்.

காவிரி திறக்கப்படுவதை முன்னிட்டு, தூர் வாரும் பணிக்கு உத்தரவு போட்டுள்ளது தமிழக அரசு. இந்த விவகாரத்த்ஹில் மோசடி நடைபெறுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டுகிறது.


காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிக்கான நிதிஒதுக்கீடு, டெண்டர் விடுவது என அனைத்துமே காலதாமதமாக துவங்கப்பட்டது. ஜனவரி-28ந் தேதியே மேட்டூர் அணை மூடப்படும் நிலையில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிக்கான ஒப்பந்தம் மே-20ந் தேதி தான் விடப்பட்டது. ஜூன்-12ந் தேதி அணை பாசனத்திற்காக திறக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் தூர்வாரும் பணி என்பது பெயரளவுக்கே நடைபெறும் என்பது வெள்ளிடை மலை.

தூர்வாரும் பணிக்கான ஒப்பந்ததாரர்களாக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே ஒரு மாவட்டத்தின் ஒட்டுமொத்த பணிகளையும் எடுத்துள்ளனர். பணிகளை கண்காணிப்பதற்கு மாவட்டத்திற்கொரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்திருந்தாலும் அதிகாரிகளால் அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் செல்வாக்குமிக்க நபர்களை மீறி அவர்களால் எவ்வித தலையீட்டையும் மேற்கொள்ள முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

ஒதுக்கப்பட்ட வேலையின் அளவு, நிதி ஒதுக்கீடு, பணி முடிக்க வேண்டிய காலம் ஒப்பந்ததாரரின் பெயர் போன்ற விபரங்கள் பணியிடத்தில் விளம்பர பலகையின் மூலம் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டு அப்படிப்பட்ட எந்த விபரமும் பொது மக்களுக்க தெரிவிக்கப்படாமல் வெளிப்படை தன்மையின்றி மூடி மறைக்கும் வகையில் அரசு செயல்படுகிறது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டுகிறது.

இதனால் தான் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க கோட்டஅளவில் விவசாயிகள் கண்காணிப்புக்குழுக்களை அமைக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழக அரசு, மோசடி முறைகேட்டில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக இத்தகைய குழுக்களை அமைக்க மறுத்து வருவது கண்டனத்திற்குரியது.

தூர்வாரும் பணிகள் முழுமையாகவும் தீர்மானித்த திட்டமதிப்பீட்டின் அடிப்படையில் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் விவசாயிகளின் கண்காணிப்பு குழுக்களை அமைக்கக் கோரியும் ஜூன்-1ந் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.