இன்சூரன்ஸ் பணம் வந்திச்சு ஆனா வரலை! வேதனையில் விவசாயிகள்!

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகைக்கு இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொஞ்சமாவது கைக்கு காசு வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அந்தப் பணம் அப்படியே வங்கிக்குப் போய், விவசாயிகளின் கடனுக்கும் வட்டிக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டதாக தகவல் வர நொந்து போயிருக்கிறார்கள் விவசாயிகள். இதுகுறித்து திராவிடக் கழகம் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

கஜா புயலால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பயிர் காப்பீட்டுத் தொகை தொடக்க வேளாண்மை வங்கிகள்மூலமாக வழங்கப்படும் நிலையில், அந்தத் தொகையைப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்காமல்,

ஏற்கெனவே விவசாயத்துக்காக விவசாயிகள் பெற்ற கடனுக்காக வரவு வைத்துள்ளனர் என்ற செய்தி உண்மையிலேயே அதிர்ச்சிக்குரியது - இன்னும் சொல்லப்போனால், சிறிதும் மனிதாபிமானற்ற செயலாகும் இது.

இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடன்களை இரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஒரு பக்கத்தில் எழுந்துள்ள நிலையில், இப்படியொரு செயலை மேற்கொள்ள எப்படித்தான் அரசுக்கு மனம் வந்ததோ தெரியவில்லை.

விவசாய முதலமைச்சர் என்று ஒரு பக்கத்தில் பெருமையாகப் பேசிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் விவசாயிகளின் வயிற்றில் இப்படி அடிக்கலாமா?

இதனை ஒரு கட்சி பிரச்சினையாக, அரசியல் நோக்காகப் பார்க்காமல், அவதிப்படும் விவசாயிகளின் கண்ணீர்ப் பிரச்சினை என்பதை எண்ணி தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று கேட்டுள்ளார்.