திருப்பூர் மாவட்டத்தில் பெருந்தொழுவு பகுதியில் சதீஷ் குமார் என்பவர் கந்துவட்டி பிரச்சனையால் தனது 3 வயது குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்து தானும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவிக்கு பூச்சி மருந்து! மகளுக்கு தண்ணீர் தொட்டி! பிறகு விவசாயியின் விபரீத முடிவு!

பெருந்தொழுவு கவுண்டம்பாளையம் பகுதியில் அஹமத் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த சில வருடங்களாகவே அங்கேயே தங்கி விவசாய கூலியாக வேலை செய்து வருகிறார் சதீஷ்குமார். இவர் தனது மனைவி தவமணி மற்றும் மகள் மோனிகாவுடன் அதே தோட்டத்தில் தங்கி தோட்ட வேலை பார்த்து வருகிறார்.
சதீஷ்குமார் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கோவை கும்பாலபட்டியில் இருந்த போது அங்கு இருந்தவர்களிடம் கந்து வட்டிக்கு பணம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால் கந்துவட்டிகாரர்கள் வீட்டுக்கு வந்து தொல்லை தந்ததால் அருகில் இருந்தவர்களிடம் சதீஷ்குமார் கடன் கேட்டுள்ளார் இந்நிலையில் கடன் கிடைக்காததால் மனமுடைந்த சதீஷ்குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார்.
தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மாத்திரையை விழுங்கிய அவர் மனைவி தவமணிக்கும் கொடுத்துள்ளார். பிறகு ஒன்றுமே அறியாத அந்த சின்ன குழந்தை மோனிகாவை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.இதனிடையே பூச்சி மாத்திரை தாக்கத்தால் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த தவமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தகவலறிந்து விரைந்து வந்த அவிநாசிபாளையம் போலிசார் சதீஷ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.