நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களுக்கும் சன் தொலைக்காட்சி செய்தியாளருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி.

கேரளாமாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சமீபத்தில் பெய்த பலத்தமழை காரணமாக 6.8.2020 அன்று இராஜமலாபெட்டி நயமக்காடு தேயிலை தோட்டப் பகுதியில் இருந்த தொழிலாளர்கள் குடியிருப்புகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, அதில் தமிழ்நாட்டை பூர்விகமாககொண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பலர் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.


உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குஆழ்ந்தஇரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களைபத்திரமாகமீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்துமருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமாய் மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்களை நான் 7.8.2020 அன்று தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொண்டேன்.

இந் தநிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பூர்வீகமாகக் கொண்டு பலஆண்டுகளாக அங்கே தங்கி பணிபுரிந்துவருகிறவர்கள் என்றதகவல் கிடைக்கப்பெற்றவுடன், உடனடியாக தலைமைச் செயலாளர் அவர்களை தொடர்புகொண்டு, நிலச்சரிவில்சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்து முழுத் தகவல்பெறுமாறும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் நான் உத்தரவிட்டேன்.

எனது உத்தரவின் பேரில், தேனிமாவட்டத்தில் இருந்து, மாவட்டவருவாய்அலுவலர் தலைமையில் ஒரு குழு 7.8.2020 அன்றே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்குவிரைந்து தேசியமீட்புப் பணிகுழுவினருடன் இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

இடிபாடுகளில்சிக்கிய 12 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் விரைவில்பூரணகுணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்.

இந்ததுயரச் சம்பவத்தில் தமிழ்நாட்டில் உள்ள உயிரிழந்தவர் குடும்பத்தின் நேரடி வாரிசுதாரர்களுக்கு இறந்த நபர் ஒருவருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும்: பலத்தகாயமடைந்தவர்களுக்குதலாஒருலட்சம் ரூபாயும்முதலமைச்சரின் பொதுநிவாரணநிதியிலிருந்துவழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சன் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. பி.ஜான் கென்னடி அவர்கள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 17.8.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனைஅடைந்தேன். 

பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டால், அதற்கான மருத்துவ செலவினையும், உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களது வாரிசுதாரருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கவும் நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

இதனடிப்படையில் உயிரிழந்த சன் தொலைக்காட்சி செய்தியாளர் ஜான் கென்னடி அவர்களின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.