கடலூரை கலக்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.! அடேங்கப்பா, இத்தனை நலத்திட்ட உதவிகளா..?

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் தமிழக முதல்வர் கே.பழனிசாமி. அந்த வகையில் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார்.


அத்துடன், கடலூர் மாவட்டத்தில் 26 பயனாளிகளுக்கு ₹73.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார். தொடர்ந்து ரூ.32.17 கோடியில் 22 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.57.7 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

அதன்பிறகு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவு கொரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம். கொரோனா பரவுவதை தடுக்க காய்ச்சல் முகாம் பேருதவியாக இருக்கின்றன. கடலூரில், 29 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உள்ளன.

மக்கள் நலன் கருதி விவசாயிகள் மற்றும் சிறுகுறு தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து திட்டங்கள் நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், ‘’கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.495 கோடியில் கதவணை கட்டும் பணிகள் 40% நிறைவடைந்துள்ளன.

கடலூர் மாவட்டத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் 12,514 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,554 மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.225 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது’’ என்றும் தெரிவித்தார்.