அடுத்த கல்வியாண்டிலிருந்து இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உறுதி செய்துவிட்டது..! எடப்பாடியும் பன்னீர்செல்வமும் கூட்டாக நன்றி!

தமிழ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய தொகுப்பிற்கு அளிக்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடுத்த வழக்கில், இடஒதுக்கீடு வழங்கப்பட எந்த ஒரு சட்ட ரீதியிலான தடையும் இல்லை;


இடஒதுக்கீடு அளிக்கப்பட மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அடுத்த கல்வியாண்டிலிருந்து இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நன்றியுடன் வரவேற்கிறது என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ,பன்னீர்செல்வமும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

சமூகநீதி காத்த வீராங்கனை இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பணியாற்றுவதை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இத்தீர்ப்பு அமைந்திருப்பதை பெருமையுடன் வரவேற்கிறோம்.

மத்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ் நாடு அரசு சுகாதாரத் துறை மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் அடங்கிய குழுவை அமைத்து, இடஒதுக்கீடு குறித்த முடிவை மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் காலக்கெடு விதித்திருப்பது இத்தீர்ப்பின் பலன்கள் விரைவில் நடைமுறைக்கு வர வகை செய்கிறது.

தமிழ் நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டி, அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்வில் முன்னேற்றம் கண்டிட அயராது உழைப்போம் என்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைக்கு கிடைத்த பரிசாக இத்தீர்ப்பினைப் போற்றி வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.