காஷ்மீர் கொடி பிடிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி! உதயநிதியை வம்புக்கு இழுக்கிறார்!

‘திராவிட தேசியம்’- 370 பிரிவை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானது, அது முற்றாக அழித்தொழிக்கப்பட்டால் மட்டுமே இந்தியா இந்தியாவாக இருக்க முடியும் என்று பா.ஜ.க. கட்சிக்கு ஆதரவாக மீண்டும் முழங்கியிருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி.


’’காஷ்மீர் மாநிலம் காஷ்மீரிக்கு’’ என்று கிளம்பிய போராட்டத்தைப் போலவே, ’’திராவிட நாடு திராவிடருக்கே’’ என்று இங்கும் ஒரு கும்பல் தமிழக ஆட்சியை கைப்பற்றியது. ’’காஷ்மீர் காஷ்மீரிய மக்களுக்கு’’ என்ற சிறப்பு அந்தஸ்து கோரிய சேக் அப்துல்லா இந்தியா மீது மதரீதியாக வெறுப்பு வைத்திருந்ததாக தெரியவில்லை. 

ஆனால், இன்று வரையிலும் பிரிவினைவாதத்தை உள்ளே வைத்துக்கொண்டு தமிழகத்தில் ஒரு குடும்பம் திராவிடம் என்ற சொல்லுக்குள்ளும், தமிழ் என்ற மொழிக்குள்ளும் ஒளிந்துகொண்டு பிரிவினைவாத இன்று வரையிலும் விதைத்து வருகிறார்கள். இந்தியாவில் உருவான தேசிய இனப் போராட்டங்கள் அனைத்திற்குமே ஏதாவது ஒரு மதம் தான் பின்புலமாக இருக்கிறது.

ஒரு பழமொழி உண்டு ’’இலைகள் மறைத்தாலும் காற்று விடுவதில்லை’’ என்று; அதுபோல தான் வடகிழக்கு மாநிலங்களிலும், தமிழ் தேசியத்திற்கும், திராவிடத்திற்கும் மதவாத அமைப்புகள் பின்புலமாக இருக்கின்றன.

காஷ்மீரில் எப்படி மூன்று குடும்பங்கள் மட்டுமே தளைத்தோங்கியதோ, அதேபோல, தமிழ் - திராவிட தேசியம் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்த, ஓரிரு குடும்பங்களே தளைத்தோங்கியிருக்கினறன. காஷ்மீர் ஆட்சியாளர்கள் ஏமாற்றியது போல, தமிழகத்தில் திராவிடக் கும்பல்கள் ஏமாற்றி வருகின்றன. 

திராவிடம் பேசி, தமிழால் உயிர் வாழ்ந்து ஆட்சியில் அமர்ந்தவர்கள், அவர்கள் வாரிசுகளை தயார் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். தாத்தா முடிந்து மகன் வந்தார்; மகன் முடிந்து பேரனும் தயார் செய்யப்படுகிறார்.

எப்படி 370-ஆல் காஷ்மீர் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டார்களோ, திராவிடத்தால் தமிழர்களும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார்கள். கடந்த 5-ம் தேதி மோடி அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக காஷ்மீர் மக்கள் உண்மையான விடுதலையை காணப் போகிறார்கள். வடதுருவப் பனிக்கரடிகளை போல 370 மற்றும் 35 கி துயரத்திலிருந்து மீள போகிறார்கள். இந்திய மக்களின் நெஞ்சில் குத்தியிருந்த 370 என்ற முள் அகற்றப்பட்டு விட்டது. 

இந்திய தேசம் ஒன்றென்று இனி இந்தியர் அனைவரும் மார்தட்டிக் கொள்ளலாம். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை என்று இதுவரை சொல்லளவில் இருந்த நமது எல்லை செயலளவில் வரப்போகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு சவாலாக இருந்த 370 இப்பொழுது இரத்தாகியிருக்கிறது.

அதை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானது திராவிட தேசியம். இதுவும் முற்றாக அழித்தொழிக்கப்பட்டால் மட்டுமே இந்தியா இந்தியாவாக இருக்க முடியும். மொழி, இனம், மதவாதம் பேசக்கூடியவர்கள் உள்ளடக்கத்தில் தேசப் பிரிவினைவாதிகளே; தேச விரோதிகளே! மொழி, இன, மத, சாதிய பேதங்களை மறந்து இந்தியராக பரிணமிப்போம் என்கிறார்.

இப்போது நேரடியாக உதயநிதியை வம்புக்கு இழுப்பதால், உடன்பிறப்புகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.