கருணாவுக்கு ஓட்டு போடாதீங்க… இலங்கை மக்களுக்கு சீமான் வேண்டுகோள்.

தமிழருக்கென்று தனித்த இறையாண்மையுடன் கூடிய சுதந்திர தேசம் வேண்டும் என்பதே பல்லாயிரம் ஆண்டுகால நமது இனத்தின் பெருங்கனவு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.


அதற்கான போராட்டத்தை தான் அந்த நிலத்தில் நமது முன்னவர்கள் முன்னெடுத்தார்கள். அந்தப் போராட்டம் சனநாயக வழியில் நிகழ்ந்த போதும், ஆயுத வழியில் நடந்த போதும் நமது இலக்கு நமது இனத்தின் விடுதலையாக, தாய் நிலத்தின் விடுதலையாக இருந்து வந்திருக்கிறது.

நமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கமாகத்தான் இலங்கையில் நடைபெறக்கூடிய தேர்தலில் கூட கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் நாம் உறுதியான நிலைப்பாடுகளை எடுத்து வருகிறோம். இலங்கை பாராளுமன்றத்திற்குள் போய் இதுவரை தமிழ் மக்களுக்கு எதுவொன்றும் நடக்கவில்லை என்பது கண்கூடாக இருந்தாலும் தவிர்க்க முடியாத சூழலில் அங்கே இருந்து குரலெழுப்ப வேண்டிய தேவை நமக்கிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பது, வெல்வது மட்டுமே நமது இலக்கு அல்ல. நாடாளுமன்றம் போய்ப் பேசுகிற ஒரு வாய்ப்பை, வெறுமனே ஒரு அங்கீகாரத்தைப் பெறுவதுமல்ல. தமிழர்களுக்கென்று தனித்த நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டுமென்பதே தாயக விடுதலைக்காகப் போராடிய நம் முன்னவர்களின் நோக்கம். 

நம் மக்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால நலன்களைப் பற்றி நன்கு சிந்தித்து இலங்கையில் நடைபெற இருக்கின்ற தேர்தலில் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்கிற முடிவை நாம் எடுக்க வேண்டும். வாக்கு செலுத்த விரலில் "மை" துளியை வைக்கும்பொழுது, நமக்காகத் தம் இன்னுயிரை இழந்து, மாவீரர்கள் சிந்திய ஒவ்வொரு இரத்தத்துளிகளையும் எண்ணிப் பார்த்துதான் நீங்கள் முடிவெடுக்க வேண்டும்.

தாய்மண்ணின் உரிமைகளுக்காக, இனப்படுகொலை காலத்தின்போது காணாமற்போன நம் உறவுகளை மீட்டெடுக்க சிங்கள பேரினவாத அரசை எதிர்த்து குரல் கொடுத்தவர்களுக்காக உங்கள் விரல் நீளட்டும். ஒற்றையாட்சியை ஏற்காமல், வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர் தாயகமாக அறிவிக்க யார் முயல்கிறார்களோ, தன்னாட்சி உரிமைக்காக யார் அயராது, பின்வாங்காது உறுதியாக நிற்கிறார்களோ,

நம் தாய் நிலத்தில் சிங்களப் பேரினவாத அரசால் நடந்த இனப்படுகொலை குறித்துத் தலையீடற்ற பன்னாட்டு விசாரணைக்காக யார் இன்றுவரை குரல் கொடுக்கிறார்களோ, தாயக விடுதலைப் பெறுவதற்கான பொதுவாக்கெடுப்பு யார் கோருகிறார்களோ அவர்களுக்குதான் உங்களுடைய வாக்கு செலுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

மீண்டும் மீண்டும் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா போன்ற துரோகிகளையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் வாக்கு செலுத்தி வெல்ல வைப்பதென்பது நாம் துரோகத்திற்குத் துணைபோனதாக ஆகிவிடும். அவர்கள் செய்த துரோகத்தைச் சரியென்று நாமே அங்கீகரிப்பதுபோல் ஆகிவிடும். அதை ஒருபோதும் எம்மின சொந்தங்கள் செய்யமாட்டீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குண்டு.

மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நம் தலைவரால் தொடங்கப்பட்டது என்றெண்ணி, அவர்கள் ஒருபோதும் தங்கள் இலட்சியப் பாதையில் இருந்து விலகமாட்டார்கள் என நம்பி, அவர்கள் எது செய்தாலும் ஆதரித்துச் செயல்பட்டதன் விளைவுதான் இவ்வளவு பெரிய பின்னடைவு ஈழ நிலத்திற்கு வந்துள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். தகப்பனுடைய துப்பாக்கியே என்றாலும் நம்மைச் சுடுமாயின் மரணம் நிகழும். அதனால் நம் தலைவரால் தொடங்கப்பட்டிருந்தாலும்,

இன்று அது எந்தப் பாதையில் பயணிக்கிறது, எந்தக் கருத்தை முன் வைக்கிறது, அதில் உள்ளவர்கள் இன்று எந்த நோக்கில் செயல்படுகிறார்கள் என்பதைப் பார்த்துதான் நாம் கூட்டமைப்பை பின் தொடர்வதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை முடிவுசெய்ய வேண்டும். சிங்களவருடன் இணைந்து பணியாற்றிய சுமந்திரனால் இதுவரை ஈழமண்ணில் நடந்த நன்மை என்ன? என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

நமது தாய்நிலம் முழுக்க முழுக்க இராணுவமயப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இழிநிலையிலிருந்து நம்மை மீட்க யாருமில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. எனவே நம்மை நாமேதான் வலிமையாக்கி கொண்டு போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு இந்தத் தேர்தலை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

அடுத்தத் தலைமுறைக்கு இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்லும்போது நமது இனத்தின் உரிமைக்கு, நமது தாயக விடுதலைக்குச் சமரசமின்றிக் குரல் எழுப்பக் கூடிய தலைமை யாரோ, அவர் முன்னிறுத்துகிற வேட்பாளர்கள் எவரோ அவர்களைக் கண்டறிந்து நீங்கள் உங்களுடைய வாக்கினை செலுத்த வேண்டும்.

இதில் தனிப்பட்ட முறையில் எமக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று எவருமில்லை. எவர் தமிழரின் உரிமைப் போராட்டத்தின் பக்கம், தேசியத்தின் பக்கம் உறுதியாக நிற்கிறாரோ அவர்தான் நமக்குரியவர், நமக்கு வேண்டியவர். நம் பக்கம் நிற்காது எதிரிக்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ துணை போகிற எவரும் நமக்கும் வேண்டாதவர். அந்த நிலைப்பாட்டை உணர்ந்து நீங்களே தெரிந்து, தெளிந்து முடிவெடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.