அர்ஜெண்டினாவில் நாய் ஒன்று தன்னை தன்னை வளர்த்த உரிமையாளர் இறந்தது தெரியாமல் அவர் வருகைக்காக மருத்துவமனையில் காத்துக்கிடக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
திரும்பி வருவார்! நிகழ்ந்த சோகம் தெரியாமல் வாரக்கணக்கில் மருத்துவமனையில் காத்திருக்கும் டோடோ!
சான் சல்வடா நகரில் டோடோ என்ற லாப்ரடார் இன நாயை வளர்த்த அதன் உரிமையாளர் உடல் நலம் குன்றி பப்லோ சொரியா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக உறவினர்கள் கொண்டு சென்ற போது பின்னாலேயே ஓடிச் சென்ற அந்த நாய் அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை வாசலில் அவர் வருகைக்காக மருத்துவமனை வாயிலிலேயே தவம் கிடந்தது. அவர் இறந்த நிலையில் அவரது உடலைப் பெற்றுச் சென்ற உறைவினர்கள் நாய் டோடோவை அலட்சியமாக விட்டுச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கால்களில் ஒன்றில் அடிபட்டு காயம் அடைந்த நிலையில் மருத்துவமனை வாயிலிலேயெ காத்துக்கிடக்கும் நாய் டோடோவுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கால் நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்.
டோடோவை பழைய உரிமையாளரின் நினைவுகளில் இருந்து மீட்டு அன்பாகவும், பாதுகாப்புடனும் பராமரிக்கும் புதிய உரிமையாளர் தேவை என்று அவர் கூறியுள்ளார்.