கருணாநிதி எதிர்ப்பில் உருவான அ.தி.மு.க.! புரட்சித்தலைவரின் முதல் வெற்றி எது தெரியுமா? அண்ணா சமாதியில் எம்.ஜி.ஆரின் தர்மயுத்தம்.

புரட்சித் தலைவரை தி.மு.க.வில் இருந்து கருணாநிதி தூக்கியெறிந்ததும் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தது.


தமிழகமே ஸ்தம்பித்து நின்றது. ‘’எம்.ஜி.ஆர். வாழ்க, கருணாநிதி ஒழிக’’ என்று எழுதப்பட்ட, முழங்கிய வாகனங்கள் மட்டுமே ஓடின. எம்.ஜி.ஆர். செய்தி தாங்கிவந்த நாளிதழ்களின் விலை பன்மடங்கு அதிகரித்தது. யாருடைய தலைமையும் இல்லாமல் தமிழகத்தில் தன்னெழுச்சிப் புரட்சி ஏற்பட்டது. அதிமுக உதயமானது.

1972ம் ஆண்டும் அக்டோபர் 17ம் நாள். தொண்டர்கள் புடைசூழ பேரறிஞர் அண்ணா சமாதிக்குச் சென்றார் எம்.ஜி.ஆர். ஆம், அன்றுதான் எம்.ஜி.ஆரின் தர்மயுத்தம் தொடங்கியது. 

அண்ணாவின் பெயரால் புதிய இயக்கமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்படும் என்றும், அண்ணாவின் உருவம் பொறித்த கொடிதான் கட்சிக் கொடி என்றும் அண்ணா சமாதியில் அறிவித்தார் புரட்சித்தலைவர்.

மக்கள் மன்றத்தில் தி.மு.க.வின் அநீதிகளையும், லஞ்ச லாவண்யங்களையும் எடுத்துரைப்பேன் என்று சூளுரைத்தார். அதனால் ஆளுநரிடம் தி.மு.க.வினரின் ஊழல் பட்டியலைக் கொடுத்தார் புரட்சித்தலைவர்.

கட்சி தொடங்கிய ஆறு மாதத்திலேயே திமுக என்றால் எம்.ஜி.ஆர்தான் என்பதை அழுத்தம்திருத்தமாக புரிய வைக்கும் நிகழ்வு நடந்தது. திண்டுக்கல்லில் 1973-ம் ஆண்டு மே 20-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மாயத்தேவர் நிறுத்தப்பட்டார். அப்போது ஆளும் கட்சி சார்பில் புரட்சித்தலைவருக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும், மாயத்தேவர் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு அடுத்த இடத்தை காங்கிரஸ் பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த திமுக, மூன்றாவது இடத்தைப் பிடித்து சொற்ப ஓட்டுகளில் டெபாசிட் தொகையை தக்க வைத்தது. திமுக பிளவுபட்டு இருப்பதால், இந்தத் தேர்தலில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என்ற கணிப்புகளையும் அடித்து நொறுக்கியது புரட்சித்தலைவரின் செல்வாக்கு.

இதுவரை திமுக பெற்றுவந்த அனைத்து வெற்றிகளுக்கும் புரட்சித்தலைவர்தான் மூலகாரணம் என்பது திண்டுக்கல் வெற்றி மூலம் ஆணித்தரமாக நிரூபணமானது. அன்றைக்குத் தொடங்கிய புரட்சித்தலைவரின் வெற்றி, அடுத்தடுத்த மூன்று சட்டசபைத் தேர்தல்களிலும் எதிரொலித்தது. உடல்நலம் குன்றி வெளிநாட்டு மருத்துவமனையில் இருந்தபோதும்,

தமிழக மக்கள் புரட்சித்தலைவருக்கு வெற்றிப் பரிசு கொடுத்தார்கள். புரட்சித்தலைவர் மறையும் வரை திமுகவால் எந்த சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற முடியவே இல்லை.