ஈஷாவின் இசையில் தேவாரப் பாடல்கள் ..! பரவச அனுபவம்

ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் பாடிய தேவாரப் பாடல்கள் பேரூர் ஆதினம் இன்று வெளியிட்டார்.


தமிழர்களின் பக்தி கலாச்சாரத்தை உலகுக்கு பறைச்சாற்றும் நோக்கத்தில் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசையில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் பாடிய 6 தேவாரப் பாடல்கள் இன்று (ஜனவரி 28) வெளியிட்டப்பட்டன. பேரூர் ஆதின மடத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதினம் மகாசந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் பாடல்களை வெளியிட ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் திரு. சிவ கணேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார். 

இந்நிகழ்ச்சியில், பேரூர் ஆதினம் அவர்கள் பேசுகையில், “திருமுறைகள் தமிழகத்தில் இருக்கக்கூடிய சிவபெருமானின் பல்வேறு திருகோயில்களில் அருள செய்யப்பெட்டவை என்ற பெருமைக்குரியவை. அத்தகைய திருமுறைகள் என்றென்றும் கயிலையில் ஒலித்துகொண்டிருக்கிறது என்று நம்புவது நம்முடைய மரபு. 

நம் முன்னோர்களாலும், பேரூர் புராணத்திலும் தென் கயிலாயம் என்று போற்றப்படக் கூடிய பெருமைமிக்கது நம் வெள்ளியங்கிரி மலை. கயிலாயத்துக்கு போக முடியாதவர்கள் தென் கயிலாயத்துக்கு போனாலும் அந்த கயிலாயத்தின் பலனை அறியலாம். அத்தகைய தென் கயிலாய மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையம் பல்வேறு வகையான சமயப் பணிகளையும் சமூக பணிகளையும் ஆற்றி வருகிறது. அதில் ஒரு உன்னதமான பணியாக தேவாரப் பாடல்கள் இன்று வெளியிடப்படுகிறது. தமிழுக்காக ஏராளமான பணிகள் செய்து வரும் பேரூர் ஆதினத்தில் இதை வெளியிடுவது பெருமைக்குரியது.

ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் சிறப்பான முறையில் பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றார்கள். அவற்றினூடே இந்தப் பணியையும் எடுத்து இருப்பது, தமிழுக்காகவும், சைவத்துக்காகவும் அவர்கள் ஆற்றிகொண்டிருக்கும் தொண்டினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.

ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் பாடியுள்ள தேவாரம் தொடர்பாக சத்குரு கூறுகையில், “தமிழ் கலாச்சாரம் என்பது அடிப்படையில் ஒரு பக்தி கலாச்சாரம். பக்தியையே ஒரு மூலமாக வைத்து வளர்ந்த கலாச்சாரம். பக்தி என்றால், அது வெறும் கடவுள் பற்றி அல்ல. நீங்கள் ஏதோ ஒரு தன்மையை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு போக வேண்டுமென்றால், அதற்கு பக்தி அவசியம். விளையாட்டு, இசை, கலை, தொழில் என அது எதுவாக இருந்தாலும், அதை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல அதற்கு பக்தி தேவை.

பக்தி என்றால் எல்லையில்லாத ஈடுபாடு. யார் முழு பக்தியுடன் ஒரு செயலில் இறங்குகிறார்களோ, அது சின்னதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவர்கள் எப்போதும் பரவசத்தில் இருப்பார்கள். தமிழ் கலாச்சாரத்தில் பரவசத்திலேயே வாழ்ந்த பல பக்தர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் போன்ற பல மகான்கள் பக்தி பரவசத்திலேயே உருவாக்கிய கலாச்சாரம் இந்த தமிழ் கலாச்சாரம்.

அந்த பக்தியின் வெளிப்பாடு தான் தேவாரம். பக்தியிலேயே வளர்ந்து வந்த நம் சம்ஸ்கிரிதி குழந்தைகளின் இனிப்பான குரலில் தேவாரத்தை நீங்கள் கேட்டு ரசிக்க வேண்டும். பரவசநிலைக்கு செல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். பாடல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளரும் கவிஞருமான திரு. மரபின் மைந்தன் முத்தையா, ரூட்ஸ் தொழில் குழுமங்களின் இயக்குநர் திரு. பாலசுப்பிரமணியம், தவத்திரு சந்தாலிங்க அடிகளார் கல்லூரியின் மாணவிகளும் கலந்துகொண்டனர். ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் ஒரு தேவாரப் பாடலை பாடினர்.

தில்லை வாழ் அந்தணர், வாணனை மதி சூடிய, பித்தா பிறை சூடி, மந்திரம் ஆவது நீறு, மடர் பிறை கண்ணியானை, தோடுடைய செவியன்... என தொடங்கும் 6 தேவாரப் பாடல்களும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் அதிகாரப்பூர்வ யு-யூடிப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளன.