செம டான்ஸ்...! வைரலாகும் ஆளுநர் தமிழிசையின் அசத்தல் நடனம்!

தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சவுந்தர்ராஜன் தெலுங்கானா மலை வாழ் மக்களுடன் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் தமிழிசை சௌந்தரராஜன் மலைவாழ் மக்கள் நலத் துறை சார்பில் செய்யப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஐஐடி, என்ஐ , சிவில் சர்வீஸ் போன்ற துறைகளில் மலைவாழ் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மலைவாழ் மக்கள் பகுதியில் தங்கி அவர்களின் சம்பிரதாய கலாச்சாரங்களை தெரிந்து கொள்வேன் எனக் கூறிய தமிழிசை சவுந்தர்ராஜன் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த கோய மற்றும் லம்பாடி மலைவாழ் மக்களுடன் கைகளை கோர்த்து நடனம் ஆடினார்.

பின்னர் அவர்களுடன் கலந்துரையாடி பிரச்சனைகளை தெரிந்து கொண்டார். பின்னர் அவர்களின் குழந்தைகளின் கல்வித்தரம் மேம்பட என்னவிதமான உதவிகள் தேவைப்படும் என கேட்டறிந்த தமிழிசை சவுந்தர்ராஜன் தேவையான உதவிகள் செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார்.