ஆற்காடு நவாப்புக்கு நல்ல யோகமடா..! நீதிமன்றத்தில் கிடைத்தது சாதகமான தீர்ப்பு!

ஆற்காடு இளவரசர் என்ற பட்டத்தையும், அவருக்கு வழங்கப்படும் சலுகைகளையும் திரும்பப் பெறக் கோரிய வழக்கு ஒன்றை சென்னை பெரம்பூரைச் சேர்ந்த குமாரவேலு என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், ஆற்காடு நவாப்புக்கு ஆற்காடு இளவரசர் என பட்டமும், பல்வேறு சலுகைகளும் இங்கிலாந்து அரசால் வழங்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து ஜனநாயக குடியரசாக மாறியுள்ள நிலையில், ஆற்காடு இளவரசர் என்ற பட்டத்தையும், அவருக்கான சலுகைகளையும் திரும்ப பெற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில் மனுவில், கடந்த 2005 ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை ஆற்காடு இளவரசர் வசிக்கும் அமீர் மஹாலுக்கு 2 கோடியே 74 லட்சம் ரூபாய் மத்திய பொதுப்பணித் துறை செலவிட்டுள்ளதாக குறிப்பட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆங்கிலேயர்கள் ஆட்சியில் வழங்கப்பட்ட இளவரசர் பட்டம், அவரது பரம்பரைக்கும் தொடரும் எனவும், சுதந்திரத்துக்குப் பிறகு ஆற்காடு இளவரசர் வசித்து வரும் அமீர் மஹால் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால் அதை மத்திய அரசு பராமரிப்பதாக மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆற்காடு இளவரசர் பட்டத்தை மத்திய அரசே அங்கீகரித்துள்ள நிலையில், ஆற்காடு இளவரசர் பட்டத்தை வழங்கியும், அரசியல் ஓய்வூதியம் வழங்கியும் பிறப்பித்த நிர்வாக உத்தரவில் தலையிட முடியாது என்று தள்ளுபடி செய்துவிட்டனர்.

ஆக, மீண்டும் ஆற்காடு இளவரசர் காட்டில் செம மழைதான்.