மனைவியை கனடா நாட்டில் கொடூரமாக கொலை செய்த கணவனை தூக்கிலிட வேண்டும் என்று பெண்ணின் பெற்றோர் முறையிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம்! மகளுக்கு கனடாவில் ஏற்பட்ட கொடூரம்! கதறித் துடிக்கும் தமிழ் குடும்பம்!
தர்ஷிகா என்ற பெண் இலங்கைவாழ் தமிழராவார். இவருடைய வயது 27. இவர் இலங்கையில் வசித்த போது தனபாலசிங்கம் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தர்ஷிகாவுக்கு 2 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள் உள்ளனர்.
வேலை நிமித்தமாக தனபாலசிங்கம் கனடா நாட்டிற்கு இடம்பெயர்ந்தார். தர்ஷிகா இலங்கை நாட்டிலேயே தங்கியிருந்தார். இதனிடையே 2017-ஆம் ஆண்டில் கணவருடன் வாழ்வதற்காக தர்ஷிகா கனடா நாட்டிற்கு சென்றார். தன்னுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால், கனடாவில் பணிபுரிந்து குடும்பத்தின் வறுமையை போக்க வேண்டும் என்றும் தர்ஷிகா எண்ணியிருந்தார்.
அப்போது கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இருவருக்கும் ஏற்பட்ட தகராறுகளை உறவினர்களால் தீர்த்து வைக்க இயலாததால் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி தனபாலசிங்கம் தர்ஷிகாவை சந்திக்க கூடாது என்று தீர்ப்பளித்திருந்தார்.
தீர்ப்பையும் மீறி தனபாலசிங்கம் தர்ஷிகாவை சந்தித்துள்ளார். மேலும் கத்தியை கையில் எடுத்துக்கொண்டு துரத்தி சென்றுள்ளார். இதனை பொதுமக்கள் பலர் கண்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தர்ஷிகாவை தனபாலசிங்கம் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பின்னர் காவல் நிலையத்தில் தனபாலசிங்கம் சரணடைந்தார். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கானது தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தர்ஷிகாவின் பெற்றோர், "எங்கள் மகளை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும். எங்கள் வீட்டில் விளக்கு அணைந்துவிட்டது. எங்கள் மகளை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை கடுமையாக தண்டிக்க வேண்டும். எங்கள் அழுகுரல் கனடா நாட்டிலுள்ள நீதித்துறையினருக்கு கேட்க வேண்டும்" என்று கதறி அழுதனர்.
இந்த சம்பவமானது கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.