விஜய்சேதுபதி ஒரு நடிகர்! அவருக்கு காஷ்மீரை பற்றி என்ன தெரியும்? சீண்டும் தமிழிசை!

சென்னை: ''சினிமாவில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பற்றி என்ன தெரியும்,'' என்று பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.


ஜம்மு காஷ்மீர் மாநிலம்,யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதற்கு, இந்திய அளவில் பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. இதுபற்றி பலரும் விமர்சித்து வரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி,  ''காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயக விரோதமான செயல். இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

காஷ்மீர் விவகாரம் பற்றி பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார். அடுத்தவர் வீட்டு பிரச்னையில் மற்றொருவர் தலையிட முடியாது. தலையிட கூடாது. பக்கத்து வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம். ஆளுமை செலுத்தக்கூடாது என்று பெரியார் கூறியிருக்கிறார்,'' என குறிப்பிட்டிருந்தார். 

விஜய் சேதுபதியின் கருத்து அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பலராலும் பாராட்டப்படும் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில், இதற்குப் பதிலடி தரும் வகையில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விஜய் சேதுபதியை  விமர்சித்துள்ளார்.

அதாவது, ''காஷ்மீர் பற்றி சிலர் தவறான கருத்தை பரப்பி வருகிறார்கள். சினிமாவில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பிரச்சனை பற்றி என்ன தெரியும்? காஷ்மீர் பற்றி ஒன்றுமே தெரியாத நபர்கள் எல்லாம் கருத்து கூறுகிறார்கள்.

பெரியார் பற்றி தேவையற்ற எடுத்துக்காட்டுகளை கூறுகிறார்கள். அவர்கள் சினிமாவில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள், அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், விவரம் தெரியாத நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது,'' என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.