ஒரே நேரத்தில் 3 பேரை காவு வாங்கிய பவானி! மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சி சம்பவம்!

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் உள்ள பவானிசாகர் அணையின் அருகே விவசாயம் செய்வதற்காக சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.


இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கருவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் 45, இவர் மனைவி வசந்தாமணி, மகள்கள் கெளரி 22,பிரபா 16,முருகேசனின் அண்ணன் மகன் பிரதீப் 18,மற்றும் உறவினர்கள் சேகர் 21,உள்பட 7 பேர் தனது வீட்டில் இருந்து காலை புறப்பட்டு பவானிசாகர் பகுதியில் உள்ள தங்களது விவசாய நிலத்திற்கு வந்தனர். சிறுமுகை அருகே பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஒரம்பகாடு என்னும் இடத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக முன்பு பெய்த கனமழையின் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பவானிசாகர் அணையில் நீர்மட்டம் உயர்ந்தது.இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே அப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது கோடை வெயில் அதிகமாக உள்ள நிலையில் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் குறையத்தொடங்கியுள்ளது. இதனையடுத்து பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் மீண்டும் விவசாயம் செய்வதற்காக தனது குடும்பத்துடன் வந்துள்ளார் முருகேசன்.

இந்த நிலையில் மாலை சுமார் 4 மணிக்கு பிரபா பவானி ஆற்றில் குளிக்கச்சென்றார். அப்போது அவர் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதனால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்ததை கண்ட அவருடைய தந்தை முருகேசன், அக்காள் கௌரி, உறவினர் பிரதீப் ஆகியோர் ஆற்றில் இறங்கி காப்பாற்ற முயன்றனர். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து பிரபாவை மீட்டனர். ஆனால், காப்பற்ற சென்ற 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனைக்கண்ட கரையில் இருந்த உறவினர்கள் காப்பாற்றக்கோரி சத்தம் போட்டுள்ளனர். ஆனால்,அதற்குள் அவர்கள் 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து உடனே அருகில் உள்ள காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூவர்களின் உடல்களை மீட்டனர். இதையடுத்து அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாலை நீண்ட நேரம் ஆனதால் கெளரியின் உடலை தேடும்பணி கைவிடப்பட்டது.இந்த நிலையில் இன்று காலை நீரில் மூழ்கி உயிரிழந்த கெளரியின் உடல் மீட்கப்பட்டது.

இச்சம்பவம்குறித்துசிறுமுகை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.