மருமகன் மீது சீட்டிங் கேஸ்! சந்தி சிரிக்கும் கலைஞர் மகள் குடும்பம்!

தி.மு.க.காரர்களுக்கு கை சும்மாவே இருக்காது. பிரியாணி கடையில் இருந்து ஜவுளிக் கடை வரையிலும் கை நீட்டிவிடுவார்கள்.


அந்த மாதிரி ஆட்களுடன் பழகியதாலோ என்னவோ, கருணாநிதி மகள் செல்வியின் மருமகனான டாக்டர் ஜோதிமணியும் வில்லங்கமான சீட்டிங்கில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். அதனால் அவரை குடும்பத்தில் இருந்தே விலக்கி வைத்து, அதனை அவர்களது குடும்ப நாளிதழான தினகரனில் குட்டியூண்டாக தெரிவிக்கவும் செய்துவிட்டனர்.

என்னதான் நடந்தது? ஏற்கெனவே பல்வேறு பிரச்னைகளில் சிக்கியவர்தான் டாக்டர் ஜோதிமணி. அவ்வப்போது பணம் கொடுத்து மீட்டுவருவதுதான் செல்வி குடும்பத்தினரின் வேலையாக இருந்துவந்தது.

இந்த நிலையில்தான் 80 லட்சம் ரூபாய் மோசடி விவகாரத்தில் ஜோதிமணி சிக்கிவிட, அந்த வழக்கை, மத்திய குற்றப் பிரிவு காவல்துறைக்கு மாற்றி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இப்போது ஜோதிமணி மாட்டியிருப்பது இந்த காரணத்தால்தான். ஜாகீர் அகமத் தமான் என்பவர், சௌக்கார் பேட்டை காஸ்மெட்டிக் வியாபாரி தினேஷை நேரில் தொடர்பு கொண்டு, தனக்கு தெரிந்தவரிடம் 100 ரூபாய் நோட்டுக்கள் கோடிக் கணக்கில் இருப்பதாகவும், 500 மற்றும் 2000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளாக 80 லட்சம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்தால்,

1 கோடி ரூபாயாக கிடைக்கும் என்று ஆசை வார்த்தையை அள்ளி வீசியுள்ளார். இதனை நம்பிய தினேஷ், சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை, சன்ரைஸ் அவென்யூவில் உள்ள ஒரு பங்களா வீட்டில் 80 லட்சம் ரூபாய் பணத்தோடு வந்து இறங்கினார்.

அந்த பங்களா வீட்டில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி, ஜாகீர் அகமத் தமான், முனியாண்டி, விக்னேஷ், டேவிட் உள்ளிட்ட 5 பேர் இருந்துள்ளனர்.

தினேஷிடமிருந்து பணத்தை பெற்று, அதை எண்ணிப் பார்ப்பதாக கூறி முனியாண்டி, விக்கேஷ், டேவிட் ஆகியோர் வீட்டின் பின்புற கதவு வழியாக 80 லட்சம் பணத்தோடு தப்பியோடிவிட்டனர். நீண்ட நேரம் ஆகியும் மூவரும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த தினேஷ், நீலாங்கரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, நீலாங்கரை காவல்துறையினர் ஜோதிமணி மற்றும் ஜாகீரை பிடித்துக் கொண்டனர். ஏற்கனவே பலரிடம் இவர்கள் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 80 லட்சம் பணத்தோடு தப்பிச்சென்ற முனியாண்டி விக்னேஷ், டேவிட் உள்ளிட்ட 3 பேரும் எங்கு சென்றார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது

இந்தநிலையில், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் குறி வைத்து இதுபோன்று ஏற்கனவே பலரிடம் மோசடி நடந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து, இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

ஜோதிமணி மீது, ஏற்கனவே போலி மருந்து தயாரித்த புகார் இருப்பதால், தற்போது அதைப் பற்றியும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு மேலும் ஜோதிமணிக்கு தண்டம் கட்டமுடியாது என்றுதானோ என்னவோ செல்வி குடும்பத்தினர் கைகழுவி விட்டனர். சொந்தப் பத்திரிகையில் பெரிதாக விளம்பரம் கொடுத்தால்தான் என்னவாம். ஜோதிமணி படத்தையும் போட்டிருந்தால் மற்றவர்களும் ஏமாறாமல் இருப்பார்களே..?