நடிகர் வடிவேலு பேய் மாமா என்ற புதிய படத்தில் நடிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கம் களம் இறங்கிடிச்சி! வடிவேலுவின் அடுத்த படம் அறிவிப்பு!
வைகைப் புயல் என செல்லமாக அழைக்கப்படுபவர் வடிவேலு. இவரது நகைச்சுவை காட்சிகள் பலராலும் விரும்பி பார்க்கப்படுகின்றன. பரபரப்பான நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு அரசியல் காரணங்களால், படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார். எனினும், அவருக்குப் போட்டி என யாரும் இன்றைக்கு தமிழ் சினிமாவில் இல்லை.
இத்தகைய சூழலில், அவ்வப்போது ஒரு சில படங்களில், ஹீரோவாக வடிவேலு நடித்து வருகிறார். இதன்படி, தற்போது வடிவேலு நடிப்பில், ஷக்தி சிதம்பரம் ‘பேய் மாமா’ என்ற படத்தை இயக்குவதாகக் கூறி, போஸ்டர் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இது வடிவேலுவின் புதிய படம் என்று கூறப்பட்டு வந்தாலும், ரசிகர்கள் யாரோ வடிவமைத்த போஸ்டர் என்றும், அதிகாரப்பூர்வமான படம் இல்லை என்றும் உறுதிபட தெரியவந்துள்ளது.
வடிவேலுவை வைத்து, இங்கிலிஷ்காரன், கோவை பிரதமர்ஸ் போன்ற பல படங்களில் எவர்கிரீன் நகைச்சுவை காட்சிகளை இயக்கியவர் ஷக்தி சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக எலி எனும் படத்தில் வடிவேல் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பிறகு விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க வடிவேலு தயாரானார். ஆனால் இயக்குனருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.