கல்விக்கு ஒரு பிரச்னை என்றதும் ஆவேசமாக குரல் கொடுத்தார் சூர்யா. அதேபோன்று அரசு மருத்துவமனையில் சுகாதாரம் மேம்பட வேண்டும் என்று ஜோதிகா குரல் கொடுத்தார்.
மத்திய அரசை எதிர்த்து நடிகர் கார்த்தியின் குரல்..! ஆதரவாக சூர்யாவும் களம் இறங்கியுள்ளார்.!

இப்போது, இயற்கையைக் காப்பாற்ற வேண்டும் என்று கார்த்தி உரக்க குரல் கொடுத்துள்ளார். கார்த்தியின் குரலுக்கு ஆதரவாக இன்று நடிகர் சூர்யாவும் களம் இறங்கியுள்ளார்.
சுற்றுச்சூழல் தாக்க வரைவு மசோதாவுக்கு தி.முக. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், உயிரியல் ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டு, தன்னுடைய எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்தார்.
அவரது அறிக்கையில், ’இந்தியாவில் இப்போது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களே, நம் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை. ஆனால், தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.
மரங்களையும் விவசாய நிலங்களையும் அழித்து நெடுஞ்சாலைகள் போடுவதும் இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பதும் நிச்சயம் வளர்ச்சி அல்ல. இந்த வரைவு அறிக்கையில் பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம்’ என்கிற ஒரு சரத்தே, அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இந்தச் சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்? இந்த வரைவு அறிக்கையின் சாதக பாதக அம்சங்களை பொது விவாதமாக்கி, அதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மின்னஞ்சல் முகவரியில் ஆகஸ்டு 11-ந்தேதிக்குள் நம் கருத்துகளை பதிவு செய்வோம்.
அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்துகளுக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வரவேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று அந்த அறிக்கைக்கு ஆதாவாக நடிகர் சூர்யா, ’பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்’ என பதிவிட்டுள்ளார்.
இயற்கை மீது சூர்யா குடும்பத்துக்கு உள்ள அக்கறை பாராட்டுக்குரியதுதான். இவர்களை அரசியலில் இழுத்துவிட்டு யாரும் வேடிக்கை பார்க்காமல் இருந்தால் சரிதான்.