வீட்டை விட்டு ஓடும் காதலர்களுக்கு இலவச பாதுகாப்பு மையம்! திருச்சியில் தயாரான புத்தம் புதிய வீடு!

வீட்டை விட்டு வெளியேறி தஞ்சம் அடைய இடம் இல்லாமல் தவிக்கும் காதலர்களுக்காக இந்தியாவிலேயே முதல் முறையாக பாதுகாப்பு மையம் திருச்சியில் திறக்கப்பட உள்ளது.


இந்தியாவிலும் சரி தமிழகத்திலும் சரி காதல் என்பது தீண்டத்தகாத ஒன்றாகவே பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறது. அதிலும் தங்களது மகனோ, மகளோ காதல் வயப்பட்டால் பெரும்பாலான பெற்றோரால் ஏற்க முடிவதில்லை.

 

அதிலும் மகனோ, மகளோ வேறு ஜாதியில் இணையை தேடினால் பெற்றோர்களுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்துவிடும். மேலும் காதலர்களை திருமணத்திற்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறும் காதல் ஜோடி அடைக்கலம் கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது.

 

சில சமயங்களில் காவல் நிலையத்திற்கே காதல் ஜோடி தஞ்சம் கேட்டு செல்வதுண்டு. முன்பெல்லாம் காவல் நிலையங்களில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஆனால் இப்போதோ காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து பேசி காதலர்களை பிரித்து அனுப்பி விடுகின்றனர்.

 

   இந்த நிலையில் திருச்சியில் வழக்கறிஞர் குணா என்பவர் ஆதலினால் காதல் செய்வீர் என்கிற பெயரில் ஒரு அறக்கட்டளை துவங்கியுள்ளார். அந்த அறக்கட்டளை சார்பில் திருச்சி அண்ணா நகரில் ஒரு வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டை காதலர்களுக்கான பாதுகாப்பு மையமாக அவர் அறிவித்துள்ளார்.

 

காதலர்களுக்கான பாதுகாப்பு இல்லம் என்று கூறப்படும் இந்த வீட்டை வரும் திங்களன்று வழக்கறிஞர் குணா திறக்க உள்ளார். பெற்றோர் எதிர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறும் காதல் ஜோடிகள் இந்த வீட்டில் தங்கிக் கொள்ளலாம்.

 

காதல் ஜோடிகள் விரும்பும் பட்சத்தில் சட்டப்படி திருமணம் செய்து வைக்கவும் ஆதலினால் காதல் செய்வீர் அறக்கட்டளை ஏற்பாடு செய்யும். மேலும் காதல் ஜோடிகள் ஒரு வாரம் வரை எவ்வித கட்டணமும் செலுத்தாமல் வீட்டில் தங்கிக் கொள்ளலாம். உணவும் இலவசமாக வழங்கப்படும்.

 

குறிப்பாக ஜாதி மறுப்பு காதல் ஜோடிகளுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்று வழக்கறிஞர் குணா அறிவித்துள்ளார். சாதி, மதம் ஒழிய சாதி மறுப்பு திருமணமே சரி என்கிற அடிப்படையில் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளதாக வழக்கறிஞர் குணா கூறியுள்ளார். 

சுமார் பத்து லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வீட்டில் நான்கு காதல் ஜோடிகள் வரை ஒரே நேரத்தில் தங்கிக் கொள்ள வசதிகள் உள்ளதாம்.